இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மார்ச் 11 வெளியிட்ட அறிவிப்பின் படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரையில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35ஏ கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யின் ஐடி அமைப்பின் விரிவான சிஸ்டம் ஆடிட் நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐடி தணிக்கை
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதை ஐடி தணிக்கை அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும் என அறிவித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யில் சில முக்கியமான நடவடிக்கைகள் கவனிக்கவும், கண்காணிக்கப்பட வேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஸ்மால் பைனான்ஸ் பேங்க்
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மே 23, 2017 முதல் இயங்கி வருகிறது. விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஜூன் மாதத்திற்குள் சிறிய நிதி வங்கி அதாவது ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (SFB) நடத்த உரிமம் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க தடை விதித்துள்ளது.
விஜய் சேகர் சர்மா
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைவர் விஜய் சேகர் சர்மா இந்நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இவ்வங்கியில் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் வாடிக்கையாளர்களையும் சேர்த்து வருகிறது.
பேடிஎம் பங்குகள்
பேடிஎம் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் வெறும் 0.071 சதவீதம் உயர்ந்து 776.15 ரூபாயாக உள்ளது. ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து கணக்கிடுகையில் பேடிஎம் பங்குகள் மதிப்பு இதுவரை சுமார் 50.27 சதவீதம் சரிந்துள்ளது. பேடிஎம் பங்குகள் அதிகப்படியாக 1955 ரூபாய் வரையில் உயர்ந்தது.