இந்தியாவில் வங்கி சேவைகள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன. அந்த வகையில் பெரும்பாலான இந்திய மக்களுக்கு வங்கி கணக்கு இருக்கிறது. இதன் மூலமாகவே அரசின் நேரடி நிதி உதவி திட்டங்களை நாம் பெறுகிறோம். ஏடிஎம் கார்டு , பராமரிப்பு கட்டணம், எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகள் ஆகியவற்றுக்கு எல்லாம் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணத்தை கட்டணமாக வசூல் செய்கின்றன.
வழக்கமாக நம் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வங்கிகள் மெசேஜ் அனுப்பும். இந்த நிலையில் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ் அலர்ட்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜூன் 24 அன்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை அனுப்பியுள்ளது.

இதன்படி இணக்கம் (compliance), விழிப்புணர்வு அல்லது விளம்பர நோக்கங்களுக்காக அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்களுக்கு இனி வங்கிகள் கட்டணம் வசூலிக்க முடியாது. இதுவரை பெரும்பாலான வங்கிகள் இதற்காக காலாண்டுக்கு 15 முதல் 18 ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் கட்டணமாக வசூலித்து வந்தன.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் பெரிய வங்கிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, 5 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு பெரிய வங்கிக்கு மட்டும் சுமார் 360 கோடி ரூபாய் வரை வருவாய் குறையக்கூடும்.

மேலும் குறைந்த மதிப்பு பரிவர்த்தனைகள் அதாவது 500 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதை வங்கிகள் விருப்பத்தேர்வாக வைத்துக்கொள்ளலாம் என RBI அனுமதி அளித்துள்ளது. இதுநாள் வரை இது கட்டாயமாக இருந்த நிலையில் வங்கிகள் விருப்பப்பட்டால் அனுப்பலாம் இல்லையெனில் விட்டுவிடலாம் என அறிவித்துள்ளது.
வங்கிகளை பொறுத்தவரை வெளிப்படைத்தன்மை பாதுகாக்கவும், வாடிக்கையாளர்களுக்கு உடனடி தகவல் பரிமாற்றம் செய்யவும் தான் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றன. ஆனால் அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூல் செய்ய கூடாது என்ற உத்தரவால் மறைமுக கட்டணமாக அதனை ஈடுகட்ட வாய்ப்புள்ளது. அதாவது கணக்கு பராமரிப்பு கட்டணங்கள் அல்லது குறைந்தபட்ச இருப்பு தொகை) தொடர்பான அபராதங்கள் மூலம் இந்த இழப்பைச் சரிசெய்ய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே வங்கிகள் Push notifications, In-app alerts மற்றும் வாட்ஸ்அப் போன்ற டிஜிட்டல் வழிமுறைகளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன. இவை எஸ்.எம்.எஸ்-ஐ விடக் குறைந்த செலவில் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க உதவும் என வங்கிகள் கருதுகின்றன.
வாடிக்கையாளர்களை பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் எஸ்.எம்.எஸ் கட்டண சுமையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. ஒரு காலாண்டு 15 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என்றால் கூட ஓராண்டுக்கு 60 ரூபாய் சேமிப்பாக கிடைக்கும். வங்கிகளுக்கு இது ஒரு வருவாய் இழப்பு தான், ஆனாலும் வங்கிகள் படிப்படியாக இந்த வருவாய் இழப்பை ஈடு செய்ய மாற்று வழிகளை கையில் எடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

