ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இதனால் அமெரிக்க டாலர் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது. ஒருபுறம் கச்சா எண்ணெய் அதிக விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது, மறுபுறம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தேவையான அமெரிக்க டாலர் கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய வீழ்ச்சியை கண்டு வருகிறது. விரைவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100 ரூபாயை எட்ட கூடும் என சொல்லப்படுகிறது. இப்படி ரூபாய் மதிப்பு சரிவதால் முன்பை விட அதிக பணத்தை கொடுத்து அமெரிக்கா டாலரை வாங்கி தான் இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் மட்டுமல்ல, தங்கம், வெள்ளி என அனைத்து இறக்குமதிக்கும் நாம் அதிகம் செலவிட வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒவ்வொரு நாளும் சரிவை சந்தித்து வரக்கூடிய சூழலில் அதனை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் உண்டாகி இருக்கிறது. எனவே இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த வரும் ஜூன் மாதத்தில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
பல்வேறு ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தி இருக்கின்றன. அதேபோன்ற ஒரு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கியும் வெளியிடும் என ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர்களான அனுபூதி சகாய் மற்றும் சவுரவ் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.
50 அடிப்படை புள்ளிகளாவது வட்டி உயர்த்தப்படும் என அவர்கள் கருத்து கூறுகின்றனர் ஜூன் மாதத்தில் இல்லை என்றாலும் நிச்சயமாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறக்கூடிய நாணய கொள்கை குழு கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என தெரிவித்து இருக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது ஜூன் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அறிவிப்பார். ஒருவேளை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் நம் வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டியும் பெருமளவில் உயரும். தற்போது ரெப்போ வட்டி 5. 25% என்ற அளவில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1சதவீதம் குறைக்கப்பட்ட ரெப்போ வட்டி இந்த ஆண்டு ஈரான் போர் காரணமாக உயர்த்தப்பட உள்ளது.
தற்போதுள்ள போர் சூழல் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என சொல்லப்படுகிறது. அப்படி ரெப்போ வட்டி உயர்ந்தால் வங்கிகள் சாமானிய மக்களுக்கு கொடுத்த கடன்களின் வட்டியை உயர்த்தும். எனவே நம்முடைய கையில் இருந்து வங்கிக்கு வட்டியாக செல்லக்கூடிய பணத்தின் அளவு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications

