மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்திற்கான நிதி கொள்கை கூட்டம் மும்பையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நிதி கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதாம், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், பணவீக்கம் , நாட்டின் ஜிடிபி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க பாதிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, இந்திய டாலர் கையிருப்பு குறைவது குறித்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஈரான் போர் தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ளது. இதனால் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என பல இன்னல்களை இந்தியா சந்தித்து வரும் சூழலில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.

இந்நிலையில் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் . இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு , வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் ரிசர்வ் வங்கி வட்டியை மாற்றாமல் இருப்பது மக்களுக்கு சற்றே நிவாரணம் தருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 125 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.25% வரை வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து பெரிய சர்ப்பிரைஸ் தந்தது ரிசர்வ் வங்கி. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் , தங்கு நகை கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்தன. ரெப்போ வட்டி குறைப்பு நம் கடன்களில் பல ஆயிரங்களையும் பல லட்சங்களையும் சேமித்து தந்தது.
இந்த சூழலில் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும் என சிலர் கூறினர். ஆனால் நல் வாய்ப்பாக அப்படி ஒரு முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கும் கடன்களுக்கான வட்டி ஆகும். அது குறைக்கப்பட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி குறையும், உயர்த்தப்பட்டால் நம் கடன்களின் வட்டி உயரும். தற்போது மாற்றமில்லை என்பதால் நம் வட்டி விகிதமும் மாறாது.


Click it and Unblock the Notifications

