வங்கிகளில் வழங்கப்படும் லாக்கர் வசதி குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடக்கும் பட்சத்தில், அல்லது தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இழப்பீடு வேண்டும்.
இந்த இழப்பீடானது ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இது தவிர வங்கி வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகளை கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அதனை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்
மேலும் வங்கி லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை, வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
எவ்வளவு காலி?
வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அதோடு லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.
வங்கிகள் பொறுப்பாகாது?
ஆக மேற்கண்ட அம்சங்களுக்கான வங்கி நிர்வாகம் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். இது தவிர நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு
லாக்கர் வாடகைக்கு 3 ஆண்டுகள் டெர்ம் டெபாட்சிட்டினை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.
செய்தித் தாள்களில் அறிவிக்க வேண்டும்
வங்கி இணைப்பு, அல்லது கிளை வேறு இடத்திற்கு மாற்றம், வங்கி கிளை மூடல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால், வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட, இரண்டு செய்தித்தாள்களில் அறிவிக்க வேண்டும். இது குறைந்தது இரு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும்.
சிசிடிவி அவசியம்
மேலும் லாக்கர்களை பாதுகாக்க வங்கி போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாட்கள் வரையிலான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்.
பிறருக்கும் லாக்கர் வசதி வழங்கலாம்
புதிய வழிகாட்டுதல்களின் படி, வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், CDD விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். மேலும் ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி தொடர்பு இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்க முடியும்.
எப்போது முதல் அமல்?
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்புகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள மற்றும் புதிய லாக்கர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.