இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு யூபிஐ செயலியாக பேடிஎம் திகழ்ந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மக்கள் படிப்படியாக யூபிஐ செயலிகளுக்கு மாற தொடங்கினர். அந்த சமயத்தில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற பேடிஎம் பெரிய உதவியாக இருந்தது.
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு யூபிஐ சேவை வழங்கும் செயலியாக தான் பேடிஎம் தொடங்கப்பட்டது. பின்னர் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிமம் பெற்று இருந்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவையை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் திடீரென இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் நலன்களுக்குப் பாதகமான முறையில் வங்கி நடைமுறைகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்கும், பொதுநலனுக்கும் பாதகமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி நிர்வாகத்தின் பொதுவான தன்மை உள்ளது. இதனால் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி எந்த விதமான வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, பேடிஎம் வங்கியின் மேலாண்மை மற்றும் நிர்வாக முறை திருப்திகரமாக இல்லை என்றும், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் தராது என்பதால், உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது மட்டுமில்லாமல் வங்கியைக் கலைப்பதற்காக நீதிமன்றத்திலும் மனுவை சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அப்படி வங்கியைக் கலைக்கும்போது, தனது முழு வைப்புத்தொகை பொறுப்பையும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி செலுத்துவதற்கு போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு சிக்கல் எழுவது இது முதன்முறையல்ல. கடந்த 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள் செய்வதும் வாலெட் டாப் அப் செய்வதும் தடை செய்யப்பட்டது. இதனால் பேடிஎம் பங்குகள் பெரிய அடி வாங்கின. அதில் இருந்து தற்போது தான் இந்நிறுவனம் மீண்டும் வந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி உரிமத்தையும் ரத்து செய்துள்ளது.
இந்த திடீர் அறிவிப்பு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சாதாரணமாக பேடிஎம் பயன்படுத்துவோரும் இதனால் குழப்பமடைந்துள்ளனர். தங்களுடைய பணம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறதா என பலரும் அச்சப்படுகின்றனர். முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் ரிசர்வ் வங்கியே தன்னுடைய அறிக்கையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்ப செலுத்த போதுமான கையிருப்பு பேடிஎம் நிறுவனத்திடம் இருக்கிறது என தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கிறது.
தற்போது ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை உரிமத்தை தான் ரத்து செய்து இருக்கிறது. எனவே வழக்கம்போல நீங்கள் பேடிஎம் யூபிஐ செயலியை பயன்படுத்தலாம். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதை பயன்படுத்தி கட்டணம் செலுத்துவது ,ரீசார்ஜ் செய்வது, பில் பேமெண்ட் செய்வது உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ளலாம்.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மட்டும் நீங்கள் பெற முடியாது. இதற்கிடையே பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீதான ரிசர்வ் வங்கி நடவடிக்கை மற்ற சேவைகளில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறி இருக்கிறது பேடிஎம் நிறுவனம். Paytm app, Paytm UPI, Paytm QR, Soundbox, card machines , Payment Gateway, Paytm Gold, Paytm Money ஆகியவற்றுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை அவை தொடர்ந்து செயல்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பேடிஎம் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications


