இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்தியா இன்க்-ன் பிம்பமாக இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி படு பிரபலமாக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு அதிரடி சட்டங்களைக் கொண்டு வந்து லைம் லைட்டில் நின்று கொண்டு இருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்து பிரபலமாக ஒரு அரசியல்வாதி இருக்கிறார் என்றால், அவர் நிர்மலா சீதாராமனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
நம் நிர்மலா சீதாராமன் லைம் லைட்டில் அதிகம் வரக் காரணம் இந்தியப் பொருளாதார மந்த நிலை. இப்போது இந்த மந்த நிலையை உறுதி செய்யும் விதத்தில் சில விவரங்களைச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. அதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
ஜிடிபி
கடந்த 2016 - 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016 காலாண்டில்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 9.2 % வளர்ச்சி கண்டது. அதற்கு அடுத்தடுத்த காலாண்டில் மெல்ல சரியத் தொடங்கியது. இந்த சரிவு தற்போதைய 2019 - 20 நிதி ஆண்டில் இன்னும் அதிகரித்து விட்டது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5.0 % மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது.
பாதிக்குப் பாதி
ஆக கடந்த ஜூன் 2016 காலாண்டில் 9.2 % ஜிடிபி வளர்ச்சியில் இருந்து, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 %-க்கு சரிந்து இருக்கிறது ஜிடிபி வளர்ச்சி. பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை. இவ்வளவு சிக்கலான காலகட்டத்தில் நிதி அமைச்சராக பதவியில் அமர்ந்து இருப்பதால் அவர் அடிக்கடி லைம் லைட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறார். மீண்டும் இந்தியப் பொருளாதாரத்துக்கு வருவோம்.
வெளியேறிய முதலீடுகள்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் முதலீடே வரவில்லை. மாறாக 38,930 கோடி ரூபாயை இந்தியாவில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டிலும் 79,642 கோடி ரூபாய் மட்டும் தான் வந்து இருக்கிறதாம். இப்படி முதலீடுகள் சரிந்து கொண்டு இருக்கும் போது இந்தியாவின் பொருளாதாரம் எப்படி வலுவாக இருப்பதாகச் சொல்ல முடியும்..?
ஆட்டோமொபைல்
இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 2.18 கோடி வாகனங்கள் விற்பனை ஆயின.
2017 - 18-ல் 2.49 கோடி, 2018 - 19-ல் 2.62 கோடி, 2019 - 20-ல் (ஏப் - டிச) 2.07 கோடி வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த சிக்கல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆர்பிஐ தன் ஜிடிபி கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆர்பிஐ கணிப்பு
கடந்த ஜனவரி 31, 2020 அன்று இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன் இந்தியப் பொருளாதார சர்வேயை தாக்கல் செய்தார். அதில் 2020 - 21 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 6.0 - 6.5 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்தார். ஆர்பிஐ தன் கணிப்பில் 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6 சதவிகிதமாக வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
குறைவிலும் குறைவா..?
இந்திய பொருளாதார சர்வே சொன்னதில் குறைவான அளவாக இருக்கும் 6%-த்தைத் தான் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. ஃபிட்ச் நிறுவனமோ இந்தியாவின் ஜிடிபி 2020 - 21-ல் 5.6 சதவிகிதமாக இருக்கலாம் என்கிறது. ஆக அடுத்த ஆண்டும் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.
மீண்டும் நிர்மலா சீதாராமன்
ஒட்டு மொத்தத்தில், அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் ஜிடிபி, மீண்டும் 8 சதவிகிதத்துக்கு மேல் வளர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமரின் 5 ட்ரில்லியன் டாலர் கனவு கலைந்து விடும் போலத் தான் தெரிகிறது. இதை எல்லாம் சரி செய்ய வேண்டிய சிக்கலான இடத்தில் இருக்கிறார், நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரச்னைகளை சரி செய்வாரா..?