டெல்லி : இந்திய பொருளாதாரத்தில் நிலவி வரும் கடுமையான மந்த நிலையால் இந்த முறையும் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில், ஆறாவது முறையாக வட்டி குறைப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கும் நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.5 சதவிகிதமாக படு வீழ்ச்சி கண்டது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என்றும் கருதப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 5 முறை வட்டி விகிதத்தினை 135 அடிப்படை புள்ளிகளை குறைத்திருந்த நிலையில், இந்த முறையும் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக வட்டி குறைப்பு இல்லை என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
அதிலும் கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட போதிலும் கூட, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது. மேலும் செப்டம்பர் மாதத்தில் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் துறை உற்பத்தியும் மிக வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் பொருளாதார மந்தம் தலை விரித்தாடி வரும் இந்த நிலையில், வளர்ச்சியை புதுப்பிக்க வட்டி குறைப்பு மட்டும் போதாது. போதுமான வளர்ச்சியை மீட்டெடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறிய நிலையில், தற்போது வட்டி குறைப்பும் இல்லை என்பது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்த உள்நாட்டு வளர்ச்சியானது இலக்கினை விட கணிசமான அளவு குறைவாக இருந்தது. மேலும் பல்வேறு குறிகாட்டிகளும் பலவீனமான நிலையில் உள்ளது. உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒட்டுமொத்த உணர்வுகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எட்டு முக்கிய தொழில்களின் உற்பத்தியில் குறைந்துள்ளது குறித்தும் ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
அதிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கமானது 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கமும் 4.7%-லிருந்து 5.1 சதவிகிதமாக கடுமையாக உயர்ந்துள்ளது.