ஒரே கிளிக்கில் பலருக்கும் பணம் பட்டுவாடா செய்யும் அமைப்பு தான், தேசிய தானியங்கி பட்டுவாடா அமைப்பு (National Automated Clearing House).
இதன் மூலம் டிவிடெண்ட், வட்டி, சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன்களுக்கான தவணைகள், மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கும் பரிமாற்றம் செய்ய NACH உதவுகிறது.
முக்கிய ஆப்சன்
தற்போதைய நெருக்கடியான கொரோனா காலகட்டத்தில், ஏராளமான பயனாளிகளுக்கு NACH ஒரு பிரபலமான, முக்கிய பண பரிமாற்ற ஆப்சனாக உருவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்க மானியங்களை சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையான முறையில் மாற்ற உதவுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் அனைத்து நாட்களும்
எனினும் இந்த பண பரிமாற்ற ஆப்சன் முறையானது வங்கி செயல்படும் நாட்களில் மட்டும் தான் உள்ளது. ஆனால் ஆகஸ்ட் 1 முதல் இந்த வசதியானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பல்க் பேமெண்ட் சிஸ்டம்
NACH என்பது NPCIல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டமாகும். ஆக ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை இயங்கும் என்பதால், பலருக்கும் மிக உபயோகமானதாக இருக்கும். இது ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஆர்டிஜிஎஸ் சேவை கிடைப்பதை போல, NACH சேவையும் அனைத்து நாட்களும் கிடைக்கும் வகையில் தான் முன்மொழியப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு பயன் தான்
பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் என்பது விடுமுறை நாள் வந்துவிட்டாலே, அடுத்த வேலை நாளில் தான் அனுப்புவார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் பல லட்சம் ஊழியர்கள் தங்களது சம்பளத்தினை சரியான நேரத்தில் பெறுவர். சம்பளம் மட்டும் அல்ல, டிவிடெண்ட் போன்ற பலவற்றையும் இனி முன்னதாக பெறலாம்.