பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கும் திட்டத்துடனும், கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தது மறக்க முடியாது. எப்படி மறக்க முடியும் என நீங்கள் கேட்பது புரிகிறது..
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்த பின்பு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் பல வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது, இதேவேளையில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை உயர்ந்தாலும் இன்னும் ரூபாய் நோட்டு தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருவது ரூபாய் நோட்டு புழக்கத்தின் அளவுகளில் இருந்து தெரிகிறது.
இந்நிலையில் ஆர்பிஐ ரூபாய் நோட்டை அச்சிடுவதற்காக எவ்வளவு செலவு செய்துள்ளது என்று தரவுகளை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆஸ்தான அச்சகத்தில் இருந்து பெற்ற ரூபாய் நோட்டுகளுக்குப் பாதுகாப்பு காரணிகளை அச்சிடும் பணிகளுக்காக 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 4,984.8 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இது 4,012.1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அச்சகங்கள்
ஆர்பிஐ, பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL) மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகிய அச்சகங்களில் இருந்து பெற்ற ரூபாய் நோட்டுகளின் மொத்த பணப் புழக்கம் கடந்த ஆண்டு 2,23,301 லட்சமாக இருந்து நிலையில் 2022ஆம் நிதியாண்டில் 2,22,505 லட்சமாகக் குறைந்துள்ளது.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016-17 ஆம் நிதியாண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக 8000 கோடி ரூபாய் செலவு செய்தது ஆர்பிஐ. இதைத் தொடர்ந்து அடுத்த அதிகப்படியான தொகை என்பது 2022ஆம் நிதியாண்டில் ஆர்பிஐ செலவு செய்த 4,984.8 கோடி ரூபாய் தான்.
அச்சிடும் செலவுகள்
இதேவேளையில் 2022ஆம் நிதியாண்டில் 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் அச்சிடும் செலவுகள் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் இதன் விற்பனை விலை அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதேபோல் 500 ரூபாய் நோட்டின் விற்பனை விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.
விற்பனை விலை
ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலை என்பது ஆர்பிஐ தனது பிரின்டிங் பிரஸ்-ல் இருந்து வாங்கும் காகித பணத்தில் விலையைக் குறிக்கிறது. மேலும் ஆர்பிஐ கட்டுப்பாட்டில் தான் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL) மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகிய இரண்டும் உள்ளது.