இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிதிக்கொள்கை கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்த போவதாகவும், அதனையடுத்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் 35 புள்ளிகள் உயர்த்த போவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 75 புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயரும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதம்
தற்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.40 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் மேலும் 40 புள்ளிகள் உயர்ந்தால் 4.80 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் 35 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இல்லாவிட்டால் அடுத்த வாரம் 50 புள்ளிகள் உயர்த்திவிட்டு ஆகஸ்ட் மாதம் 25 புள்ளிகள் உயர்த்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தத்தில் இன்னும் 75 புள்ளிகள் வரை வட்டி விகிதம் உயரும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சக்தி காந்ததாஸ்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கடனுக்கான வட்டி விகிதம் அடுத்தடுத்து உயரும் என்பதை உறுதி செய்தார். ஆனால் எவ்வளவு உயரும் என்பதை அவர் கூறவில்லை என்றாலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வரை வட்டி விகிதம் உயரும் என்று கூறப்படுகிறது.
பணவீக்கம்
தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையும் ஒரே நிலையில் இருப்பதால் மே மாதத்தில் பணவீக்கம் 7.5 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
பெட்ரோல் டீசலுக்கான வரி குறைப்பு மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு, விமான எரிபொருள் குறைப்பு ஆகியவை எல்லாம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சுமை
இந்த மாதம் நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 40 புள்ளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 35 புள்ளிகளும், ஒட்டுமொத்தமாக 75 புள்ளிகளும் உயர்த்தப்பட்டால் மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் இது அனைத்தும் பொதுமக்கள் தலையில்தான் சுமத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.