இந்திய ரிசர்வ் வங்கி யோகேஷ் கே தயாளை கூடுதல் இயக்குநராக நியமித்ததில் இருந்து ஆர்பிஎல் வங்கி உயர் நிர்வாக மட்டத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கண்டு வருகின்றது.
குறிப்பாக அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஸ்வவீர் அஹுஜா உடனடியாக விடுமுறையில் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கும் வங்கி குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில் நிர்வாக இயக்குனரான ராஜீவ் அஹுஜாவை இடைக்கால நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு வங்கி குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
இதற்காக முழுமையாக காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. ஜூன் 2021 இல் வங்கியின் CEO அஹுஜாவுக்கு ஒரு வருட கால அவகாசத்தை மட்டுமே ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. ஆக இதுவும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
யாரிந்த தயாள்
இரண்டு ஆண்டுகளுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள தயாள், இந்திய ரிசர்வ் வங்கியில் தகவல் தொடர்புத் துறையின் தலைமைப் பொது மேலாளராக உள்ளார். அவர் முன்பு பணவியல் கொள்கைத் துறை மற்றும் வங்கி கண்காணிப்புத் துறை ஆகியவற்றில் பணியாற்றினார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
அதிரடி நடவடிக்கை
தனியார் வங்கியின் குழுவில் கூடுதல் இயக்குனரை நியமிக்க ரிசர்வ் வங்கி தனது உரிமையைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. முன்பாக ரிசர்வ் வங்கி யெஸ் வங்கி, உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மற்றும் தனலக்ஷ்மி வங்கி ஆகியவற்றின் வாரியங்களில் ஒரு இயக்குனரை நியமித்தது நினைவுகூறத்தக்கது.
லாபம் சரிவு
ஆர்பிஎல் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 93% குறைந்து, ரூ.9.7 கோடியாக உள்ளது. இப்போது மட்டும் அல்ல தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் லாபம் சரிவினைக் கண்டுள்ளது. வாரக்கடனும் அதிகரித்துள்ளது.
வாரக்கடன் அதிகரிப்பு
குறிப்பாக 2018 -19ல் 867 கோடி ரூபாயாக இருந்த லாபம், 2020 - 21ல் 508 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சொத்துக்கள் மீதான வருமானமும் 1.27%ல் இருந்து 0.54% ஆக குறைந்துள்ளது. இதேபோல இவ்வங்கியின் பாதுகாப்பற்ற கடன் என்பது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது.
டெபாசிட் & பணப்புழக்க விகிதம்
155% பணப்புழக்க கவரேஜ் விகிதம், இதில் ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச விகிதம் 100% ஆகும். வங்கியின் டெபாசிட் விகிதமும் அதிகரித்துள்ளது. இப்படி பலசாதகமான விஷயங்கள் இருந்தாலும், சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. இத்தகைய கவலைகளுக்கு மத்தியில் தான் ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கலாம் என தெரிகின்றது.