இந்திய ரிசர்வ் வங்கி யோகேஷ் கே தயாளை கூடுதல் இயக்குநராக நியமித்ததில் இருந்து ஆர்பிஎல் வங்கி உயர் நிர்வாக மட்டத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்களைக் கண்டு வருகின்றது.
குறிப்பாக அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஸ்வவீர் அஹுஜா உடனடியாக விடுமுறையில் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை வங்கி குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் அதன் நிர்வாக இயக்குனரான ராஜீவ் அஹுஜாவை இடைக்கால நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதற்கு வங்கி குழு ஒப்புதல் அளித்துள்ளது.
என்ன காரணம்?
மருத்துவ தேவைக்காக உடனடியாக விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படும் அஹீஜாவின் விடுமுறைக்கு, முழுமையாக காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. எனினும் ஜூன் 2021 இல் வங்கியின் CEO அஹுஜாவுக்கு ஒரு வருட கால அவகாசத்தை மட்டுமே ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. ஆக இதுவும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதோடு ஆர்பிஎல் வங்கியின் நிதி நிலை குறித்த கவலையும் முக்கிய கவலையாக இருக்கலாம் என தெரிகின்றது. இதற்கிடையில் தான் ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
20% மேலாக சரிவு
இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையானது 20% மேலாக சரிவில் காணப்படுகின்றது.
மேலும் ஆர்பிஎல் வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 93% குறைந்து, 9.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இப்போது மட்டும் அல்ல தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் லாபம் சரிவினைக் கண்டுள்ளது. வாராக்கடனும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
வாரக்கடன் அதிகரிப்பு
குறிப்பாக 2018 -19ல் 867 கோடி ரூபாயாக இருந்த லாபம், 2020 - 21ல் 508 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் சொத்துக்கள் மீதான வருமானமும் 1.27%ல் இருந்து 0.54% ஆக குறைந்துள்ளது. இதேபோல இவ்வங்கியின் பாதுகாப்பற்ற கடன் என்பது மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் வங்கி சற்று அழுத்தத்தினை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. இதுவும் கூட ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
டெபாசிட் & பணப்புழக்க விகிதம்
எனினும் 155% பணப்புழக்க கவரேஜ் விகிதம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச விகிதம் 100% ஆகும். வங்கியின் டெபாசிட் விகிதமும் அதிகரித்துள்ளது. இப்படி பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், வாரக்கடன் விகிதம் என்பது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சந்தைக்கு எதிரான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இவ்வங்கி பங்கின் விலையானது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
தற்போது நிலவரம் என்ன?
ஆர்பிஎல் வங்கியின் பங்கு விலையானது தற்போது 19.14% சரிவினைக் கண்டு 139.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 155.65 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 130.20 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 274.30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலையும் 130.20 ரூபாயாகும். இது பிஎஸ்இ-ல் 18.90% குறைந்து, 139.80 ரூபாயாகும்.இது முன்னதாக 20% வரையில் சரிந்திருந்த நிலையில், தற்போது சற்றே மீண்டுள்ளது.