இந்திய முதலீட்டு சந்தை தற்போது பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், பலரின் கண் மீண்டும் ரியல் எஸ்டேட் மீது திரும்பியுள்ளது. பல பெரும் பணக்காரர்கள் தங்களுடைய பங்கு முதலீட்டை விலை உச்சத்தில் இருந்த போது விற்பனை செய்த பணத்தை நேரடியாக ரியல் எஸ்டேட் துறையில் போட்டனர். இத்தகைய சூழ்நிலையில் தான் சாமானிய மக்கள் பங்குச்சந்தையில் பணத்தை முதலீட்டு செய்து தற்போது மாட்டிக்கொண்டு உள்ளனர்.
உதாரணமாக டிமார்ட் தலைவர் ராதாகிஷன் தமனி பங்குச்சந்தையில் எப்பேர்ப்பட்ட கில்லாடி என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய வேல்யூ இன்வெஸ்டிங் முறையை பார்த்து வியக்காதவர்களே இல்லை, ஏன் இந்திய பங்குச்சந்தையில் பிக் புல் என அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பல முறை ராதாகிஷன் தமனியை தனது குரு என்றும், இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார்.
இத்தகைய ராதாகிஷன் தமனி தான் கடந்த 5 வருடத்தில் 30க்கும் அதிகமான வீடுகளை வாங்கியுள்ளார். இதுபோக தனது வர்த்தகத்திற்காக பல கமர்சியல் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கியுள்ளார். இது எத்தனை பேருக்கு தெரியும்..?

ஆனால் இன்றளவும் பல finfluencers-கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது என்பது மிக குறைந்த லாபம் மட்டுமே தரும், இதேபோல் நீண்ட கால கடனில் மாட்டிக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு தான் உண்மையான லாபம் கிடைக்கும் என கூறிவருகின்றனர். அப்படியானால் ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்படும் முதலீட்டுக்கு உண்மையான லாபம் என்ன..?
சமுக வலைத்தளத்தில் வெளியான பதிவில் ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான லாபம் குறித்த விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. ஒருவர் 2020ல் சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கியுள்ளார்.. இதை 2025ல் சுமார் 1.8 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பொதுவாக எல்லோரும் என்ன நினைப்பார்கள் 5 வருடத்தில் 80 லட்சம் ரூபாய் லாபம் என்று தானே கணக்கிடுவார்கள். ஆனால் உண்மையான கணக்கு வேறு.
ஒரு வீடு வாங்கும் போது இதர செலவுகள் அதிகம் உள்ளது, உதாரணமாக வீடு வாங்கும் போது ஜிஎஸ்டி 5 லட்சம், பத்திர செலவுகள் மற்றும் பதிவு கட்டணமாக 7 லட்சம், வீடு வாங்கியதற்காக ப்ரோகரேஜ் 3.6 லட்சம், வீட்டை விற்பனை செய்தது மூலம் கிடைத்த தொகைக்கு கேப்பிடல் கெயின்ஸ் வரி 10 லட்சம் இது மட்டும் 25.6 லட்சம் செலவாகியுள்ளது. மொத்த 80 லட்ச லாபத்தில் இதை கழித்தால் 54 லட்சம் மட்டுமே. இதோடு செலவுகள் நிற்கவில்லை..
இந்த 5 வருட காலத்திற்கு நீங்கள் செலுத்திய மெயின்டனென்ஸ் தொகை, மறுசீரமைப்பு மற்றும் ரிப்பேர் கட்டணம், சொத்து வரி, வீட்டுக்கடனுக்கான வட்டி போன்றவை உள்ளது.
உதாரணமாக 1 கோடி ரூபாய் வீட்டை நீங்கள் 20 வருடம் ஹோம் லோனில் 8.5 சதவீத வட்டியில் வாங்கினால் வட்டி மட்டும் 1.08 கோடி ரூபாய். இதை நீங்கள் 5 வருடத்தில் முடித்தாலும் 23.09 லட்சம் வட்டி மட்டும் செலுத்தியிருப்பீர்கள். வீட்டுக்கடன் வட்டியுடன் இதர செலவுகளை சேர்த்தால் கூடுதலாக 25 லட்சம் இழப்பு ஏற்பட்டு இருக்கும்.
இந்த செலவை கழித்தால் 24 லட்சம் மட்டுமே உங்களுக்கான லாபம். உண்மையான லாபம் என்னவென்றால் நீங்கள் இந்த வீட்டில் 5 ஆண்டுகள் வாழ்ந்தது தான்.
அதாவது 1 கோடி ரூபாய் மதிப்பிலான அப்பார்ட்மென்ட் வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தால் குறைந்தது 400000 முதல் 60000 ரூபாய் வாடகை கிடைத்திருக்கும். இதை கணக்கிட்டால் 60 மாதத்திற்கு மாதம் 50000 ரூபாய் வாடகை என வைத்துக்கொண்டால் 30 லட்சம் ரூபாய் கிடைத்திற்கும். இதையும் லாப கணக்கில் சேர்க்க வேண்டும், இல்லையெனில் 30 லட்சம் மதிப்பிற்கு அனுபவித்துள்ளோம் என கணக்கிட வேண்டும்.
இதை கணக்கிட்டால் மொத்தம் 54 லட்சம் லாபம் 5 வருடத்தில் கிடைத்துள்ளது. அனைத்து வரி, வட்டி போக கிட்டத்தட்ட 10 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. சொல்லப்போனால் பங்குச்சந்தை முதலீட்டுக்கு கிடைக்கும் 12 சதவீத லாப அளவை நெருங்கிவிட்டது. இதுதான் உண்மையான லாபம்.
இதேபோல் வீடு ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு லாப அளவீட்டையும், வாடகையையும் கொடுக்கும். இதேபோல் தான் பங்குகளும், பங்குச்சந்தை முதலீடுகளும். நிஃப்டி 50 குறியீடு கடந்த 2 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு ஜீரோ லாபத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications