வீடு என்பது அனைவருக்கும் அடிப்படைத் தேவையான விஷயம். ஆனால், இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் மலிவு வீடுகளின் தட்டுப்பாடு நிலவுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாகக் குறிப்பாக கொரோனாவுக்கு பின்பு இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்தது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் அதிகரித்துள்ள வேளையிலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் திறக்கப்படுவது என்று இந்திய ரியல் எஸ்டேட் துறை மொத்தமாக மாறியுள்ளது.

இந்தியாவில் பெரு நகரங்களில் கடந்த 2 வருடமாக பட்ஜெட் விலை வீடுகளின் அறிமுகம் பெரிய அளவில் குறைந்துள்ளது. அதன் மூலம் சாமானிய மக்கள் வீடு வாங்கும் வாய்ப்புகள் காணாமல் போயுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையின் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான PropEquity வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லி-NCR, மும்பை பெருநகரப் பகுதி (MMR), பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில், இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே ரூ.60 லட்சம் வரையிலான விலையில் புதிதாகக் கட்டப்படும் மலிவு வீடுகளின் எண்ணிக்கை 38% குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 53,818 மலிவு வீடுகள் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 33,420 ஆகவே உள்ளது. நிலம் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம் என PropEquity நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுமானத்தில் அதிகரித்துள்ள செலவால், மலிவு விலை வீடுகள் கட்டுவது லாபமில்லாமல் இருப்பதாலோ அல்லது நஷ்டம் தருவதாலோ, கட்டுமான நிறுவனங்கள் அவற்றைக் கட்டமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதேபோல் ஆடம்பர வீடுகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.
PropEquity நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சமீர் ஜசுஜா கூறுகையில், "இந்தியாவின் முன்னணி எட்டு நகரங்களில் மலிவு வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் ரூ.60 லட்சத்திற்கும் குறைவான விலையில் 2,24,141 வீடுகள் கட்டப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் இது 20% குறைந்து 1,79,103 வீடுகளாகவே இருந்தது. இந்த சரிவு 2024 ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
இதனால் முதல் முறையாக வீடு வாங்குவோர், பெரு நகரங்களில் வீடு வாங்குவோர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். வங்கிகள் கடன் எளிதாக கொடுத்தாலும், வீட்டின் விலை அதிகமாக இருப்பதால் EMI தொகை அதிகமாக இருக்கும். இதனால் ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு வாங்கும் கனவு, வெறும் கனவாகவே இருந்துவிட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications