இந்தியாவுக்கு நடப்பு நிதியாண்டு ஒரு போறாத காலமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் வாட்டி வதைத்த பொருளாதார மந்த நிலை, தற்போது கொரோனா, நிலச்சரிவு, வெள்ளம் என பல இயற்கை பேரிடர்கள், இதற்கிடையில் மோசமான பல சம்பவங்கள், விமான விபத்து, தீ விபத்து, விஷ வாயு தாக்கி பலி இப்படி ஏராளமாக சம்பவங்கள் அரங்கேறி கொண்டுள்ளன.
போதாக்குறைக்கு இவற்றின் எதிரொலியாக கடந்த ஜூன் காலாண்டு ஜிடிபி விகிதமானது, 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமாக அளவு சரிவினைக் கண்டு, 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
கொரோனாவினை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கி போயின. குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அத்தியாவசியம் தவிர அனைத்தும் முடக்கப்பட்டன. ஏன் குறிப்பிட்ட காலம் வரை அந்த அத்தியாவசிய பொருட்களுக்கே கூட காலகெடு இருந்து வந்தது.
இப்படி அடுத்தடுத்த பல அடிகளால் இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்திற்கே சென்றுள்ளது எனலாம். அது எந்தளவுக்கு எனில் ஜி20 நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்பு என்றால், அது இந்தியாவுக்கு தான். அந்தளவுக்கு இந்தியா பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம்.
எனினும் இதில் கொஞ்சம் சந்தோஷப்படக்கூடிய விஷயம் என்னவெனில், தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரும் காலாண்டுகளில் ஜூன் காலாண்டு அளவிலான மோசமான வீழ்ச்சி இருக்காது. சற்று பொருளாதாரம் மேம்படலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் தான் SBI ecowrab ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி விகிதமானது 10.9% வீழ்ச்சி காணலாம் என அறிவித்துள்ளது.
இது முந்தைய கணிப்பில் நடப்பு நிதியாண்டில் இந்த உண்மையாக ஜிடிபி விகிதமானது -6.8% ஆக சுருங்கும் என்றும் கணித்திருந்தது. அதோடு இரண்டாவது காலாண்டில் இந்த உண்மையான ஜிடிபி விகிதமானது -12% முதல் - 15% வீழ்ச்சி காணலாம் எனவும், இதே மூன்றாவது காலாண்டில் சற்றே மேம்பட்டு - 5% முதல் -10% வரையில் வீழ்ச்சி காணலாம் எனவும் கணித்துள்ளது. இதுவே நான்காவது காலாண்டில் -2% முதல் -5% வரையில் இருக்கலாம் எனவும் கணித்துள்ளது.
மேலும் இந்த தொற்று நோய் கல்வி, தனி நபர் செலவினங்கள், நுகர்வு செலவினங்கள், சுகாதார செலவினங்கள் என பலவற்றையும் குறைக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த நேரத்தில் இரு நல்ல விஷயங்களும் வந்துள்ளன. ஒன்று துறை வாரியாக கடன் வழங்கப்பட்ட அறிக்கையில், முக்கித் துறைகளில் ஜூலை மாதத்தில் கடன் வழங்கிய அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறிகின்றன. இது தொழில் துறையில் மட்டும் அல்ல, குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயம் மற்றும் தனி நபர் கடன் விகிதமும் கணிசமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
இரண்டாவது இந்த நெருக்கடியாக முதல் காலாண்டில் கூட சில துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. குறிப்பாக சாலைகள், இரசாயனம், மின்சாரம், மருத்துவமனைகள் மற்றும் கழிவு நீர் குழாய் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும்.
மேலும் கட்டுமானம், வர்த்தகம் மற்றும் ஹோட்டல்கள், விமான துறைகள் போன்ற துறைகளில் புதுபிக்க வேண்டிய அவசியம் உள்ளது என பல பரிந்துரைகளையும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.