சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் பட்ஜெட் அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் கார்ப்பரேட் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது, இதன் வெளிப்பாடு தான் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள அதிரடியான வளர்ச்சி.
இதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வருமான வரி மற்றும் வருமான வரிப் பலகையில் எவ்விதமான மாற்றத்தையும் மத்திய அரசு அறிவிக்காமல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளங்கார்கள் ஈபிஎப் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரிச் சலுகை பெற்று வந்த நிலையில், இதற்கு முக்கியமான கட்டுப்பாட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு மூலம் யாருக்கெல்லாம் பாதிப்பு, எவ்வளவு பாதிப்பு என்பதைத் தெரிந்துகொள்வோம். உண்மையில் இந்த அறிவிப்பின் தாக்கம் பயப்படும் அளவிற்கு உள்ளதா..?
ஈபிஎப் மற்றும் விபிஎப் திட்டம்
பட்ஜெட் அறிக்கையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளதன் படி ஈபிஎப் மற்றும் விபிஎப் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் வரையில் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகச் செய்யப்படும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு உரிய நபரின் வருமான படி அளவின் படி வருமான வரி செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம்
உதாரணமாக உங்களது ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம், இதில் கண்டிப்பாக 25 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். இப்படியிருக்கும் போது 12 சதவீதம் ரூபாய் பிஎப் திட்டத்திற்குச் செல்லும். இதன் படி வருடம் 3 லட்சம் ரூபாய் அளவிலான தொகை பிஎப் திட்டத்திற்குச் செல்லும்.
பட்ஜட்டுக்கு முன், பட்ஜட்டுக்குப் பின்
பட்ஜட்டுக்கு முன்பு இந்த 3 லட்சம் ரூபாய்க்கு தற்போதைய பிஎப் வட்டி விகிதமான 8.5 சதவீத வட்டி வருமானம் அடிப்படையில் முழுமையாக வரி விலக்கு கிடைக்கும். ஆனால் தற்போது 2.5 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரி விலக்கு இருக்கும் காரணத்தால் மீதமுள்ள 50,000 ரூபாய்க்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கும் 4,250 ரூபாய் வருமான வரி விதிப்புக் கணக்கீட்டில் சேர்க்கப்படும்.
யாருக்கெல்லாம் பாதிப்பு
இதன் மூலம் மாதம் 20,833 ரூபாய் வரையில் பிஎப் மற்றும் விபிஎப் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வோருக்கு எவ்விதமான வரி பாதிப்பும் இல்லை என்பது தான். அதாவது மாதம் 20,833 ரூபாய் வீதம் வருடத்திற்கு 2,49,996 ரூபாய்.
மேலும் இந்தக் கணக்கீட்டில் முதலீடு செய்வோருக்கு மாதம் அடிப்படை சம்பளமாக அதாவது பேசிக் பே 1.73 லட்சம் ரூபாய் வரையில் இருப்பவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
யூலிப் திட்டங்கள்
இதே விதிமுறை தான் யூலிப் திட்டங்களுக்கும் பொருந்தும், வரி சேமிப்புக்காக நீங்கள் யூலிப் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் வருடம் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி விலக்கு உண்டு.
ஆக 2.5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக முதலீடு செய்தால் மட்டுமே வருமான வரி விலக்கு உண்டு.
யூலிப் திட்ட முதலீடு
உதாரணமாக நீங்கள் வரி சேமிப்பிற்காக வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் யூலிப் திட்டத்தில் முதலீடு செய்தால் 8 சதவீதத்தில் வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொள்ளுங்கள், இதன் மூலம் 80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பட்ஜெட்டுக்கு முன் இந்த 80,000 ரூபாய்க்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும், ஆனால் இப்போது இந்த 80,000 ரூபாய்க்கு 10 சதவீதம் வீதம் 8,000 ரூபாய் வரியாகச் செலுத்த வேண்டும்.