சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 1,448 பங்குகள் சரிந்தன. சென்செக்ஸின் 30 பங்குகளில் ஒரே ஒரு பங்கு (ஐடிசி) மட்டுமே இறக்கம் காணாமல் வர்த்தகமானது.
மற்ற 29 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆக்ஸிஸ் பேங்க், எஸ் பி ஐ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா போன்ற சென்செக்ஸின் 30 பங்குகளில் இருக்கும் இந்த பங்குகளே 5 சதவிகிதத்துக்கு மேல் இறக்கம் கண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கொடூர சரிவுக்கு உலகின் ஆறு கண்டத்திலும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் மட்டும் காரணம் இல்லை. வேறு சில விஷயங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அமெரிக்க பங்குச் சந்தைகள்
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ், கடந்த ஐந்து வர்த்தக நாளில் சுமார் 10 சதவிகிதம் சரிவைக் கண்டது. அதே போல் அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் ஒரே நாளில் சுமாராக 1,190 புள்ளிகள் சரிவைக் கண்டது. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் இப்படி ஒரே நாளில் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் காண்பது இதுவே 4-வது முறையாம்.
ஆசிய சந்தைகள்
அமெரிக்க சந்தைகளே ஆட்டம் காணும் போது ஆசிய சந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா..? அங்கும் பலத்த அடி தான். ஆசிய சந்தைகளிலேயே அடி குறைவாக வாங்கிய சந்தை என்றால் அது தைவானின் தைவான் வெயிடெட் தான். வெறும் 1.24 % மட்டுமே சரிந்தது. அதிக இறக்கம் கண்ட சந்தை என்றால் சீனாவும் ஜப்பானும் தலா 3.71 & 3.67 சதவிகிதம் சரிந்தன.
ஜிடிபி
உலக பொருளாதார காரணிகள் போக, நம் இந்திய பொருளாதார வளர்ச்சி காரணிகளில் ஒன்றான ஜிடிபியும் காலை வாரி விட்டது. இந்த டிசம்பர் 2019 காலாண்டில் சுமாராக 4.5 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி அடையும் என எஸ்பிஐ போன்ற நிறுவனங்கள் சொன்னது குறிப்பிடத்தக்கது. இந்த பயமே சென்செக்ஸில் ஜிடிபி செய்தி செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிட்டது. சந்தையை சகட்டு மேனிக்கு துவைத்துவிட்டது.
முதலீடுகள் அவுட்
கடந்த நான்கு வர்த்தக நாளில், இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, முதலீட்டாளர்கள் சுமாராக 10,000 கோடி ரூபாயை விற்று வெளியேறி இருக்கிறார்களாம். மேலும் இப்படி தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரிக்கலாம் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
டெக்னிக்கல்
கடந்த அக்டோபர் 29, 2019-க்குப் பிறகு ஒரு நாள் கூட சென்செஸ் 39,500 புள்ளிகளுக்குக் கீழ் வந்ததில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று பிப்ரவரி 28, 2020 அன்று நேரடியாக 38,500 புள்ளிகளுக்குக் கீழ் வந்து இருக்கிறது சென்செக்ஸ். ஆக சார்ட் படி பார்த்தாலும் அடி பலமாகத் தான் தெரிகிறது.
டாலர் Vs ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.17 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றில் இருந்தே, இந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து 72 ரூபாய்க்கு மேல் சரிந்து கொண்டு இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.