இந்தியாவின் 5 முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நாட்டின் 85 சதவீத கார் விற்பனை சந்தையைத் தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதனால் வெறும் 15 சதவீத சந்தைக்குச் சுமார் 22 பிராண்டுகள் போட்டிப்போடும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் பல கலாச்சாரம், பல மொழி, பல பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் காரணத்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தை மிகவும் போட்டி மிகுந்தவையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் வெறும் 5 நிறுவனங்கள் மொத்த சந்தையும் ஆட்டிப்படைக்கிறது.
டாப் 5 நிறுவனங்கள் ஆதிக்கம்
இந்தியாவில் பயணிகள் வாகன பிரிவில் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 85 சதவீத ஆட்டோமொபைல் வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த டாப் 5 பட்டியலில் புதிதாக இந்தியாவில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் இடம்பெற்றுள்ளதே சக போட்டி நிறுவனங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
22 பிராண்டுகள் மத்தியில் போட்டி
மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய 5 நிறுவனங்களும் 85 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள 15 சதவீத சந்தைக்கு ரெனால்ட், போர்டு, ஹோண்டா, டோயோட்டா, வோக்ஸ் வேகன் உட்பட 22 நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.
85 சதவீத ஆட்டோமொபைல் சந்தை
ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த வருடம் நவம்பர் மாத தரவுகள் படி டாப் 5 நிறுவனங்கள் இந்தியப் பயணிகள் வாகன பிரிவில் 81.56 சதவீத சந்தையைக் கைப்பற்றியிருந்த நிலையில், இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இதன் அளவு 4.5 சதவீதம் அதிகரித்து டாப் 5 நிறுவனங்கள் மட்டும் சுமார் 85 சதவீதத்தைத் தாண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தை
உலகிலேயே இந்தியா 4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருக்கும் நிலையில், நிறுவனங்கள் மத்தியிலான ஆதிக்கம் மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபல் வர்த்தகம் கொண்ட சீனாவில் டாப் 5 நிறுவனங்கள் வெறும் 40 சதவீத சந்தையை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் 68 சதவீதம், ஜெர்மனியில் 50 சதவீதம் சந்தைகளை மட்டுமே டாப் 5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.
ஜப்பான் Vs இந்தியா
ஜப்பான் நாட்டில் டாப் 5 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சுமார் 81 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது. இதில் டோயோட்டா நிறுவனம் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
இதே டோயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெறும் 3 சதவீத சந்தையை வைத்துள்ளது.
மாருதி சுசூகி மக்களின் பேவரைட்
2020ல் கொரோனா காரணமாக மாருதி சுசூகி நிறுவனம் புதிய கார்களை அறிமுகம் செய்யாமலேயே தனது சந்தை ஆதிக்கத்தை 45 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்த வருடம் வளர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் மீதான மக்களின் நம்பிக்கை, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான வடிவம், விலை கார், இந்தியா முழுக்க நெட்வொர்க் என மக்களை நீண்ட காலமாகக் கவர்ந்து வருகிறது மாருதி சுசூகி.