இந்திய ஐடி துறை கடந்த 3 வருடங்களாக வரலாறு காணாத வளர்ச்சி அடைந்து வந்ததைக் கண்முன்னே பார்த்தோம், ஆனால் இந்த நிலை தொடர்ந்து மாறி வருவது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள் உள்நாட்டு வர்த்தகத்தைக் காட்டிலும் வெளிநாட்டு வர்த்தகத்தைத் தான் அதிகளவில் நம்பியிருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை பெரும் பாதிப்பை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு உருவாக்கியுள்ளது.
இது ஐடி ஊழியர்களை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், ஐடி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை அதிகமாகப் பாதிக்கிறது.
பொருளாதார மந்தநிலை
அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்தநிலை அதிகரித்து வரும் கவலைகள் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியைக் குறைக்கலாம் என்பதால், இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அடுத்த சில காலாண்டுகளுக்கு இந்திய ஐடி நிறுவனங்களின் லாப வரம்புகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் ஐடி பங்குகள் தரம் இறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிஃப்டி சந்தை
நிஃப்டி சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு திங்கட்கிழமை வர்த்தகத்தில் 3.5% சரிந்தது, இது செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சிறப்பாக இருந்த போதிலும் 2.63 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை சரிவில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை.
ஜெரோம் பவல்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் வெள்ளிக்கிழமை பேசுகையில், அதிக வட்டி விகிதங்கள் குறைந்த பொருளாதாரத்திற்கு வழிவகுத்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தான் மத்திய வங்கியின் முன்னுரிமை அளிக்க உள்ளது என்று கூறினார்.
ஐடி பங்குகள்
இதனால் ஏற்படும் மந்தமான பொருளாதாரம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குறைந்த தொழில்நுட்ப செலவினங்களுக்கு வழிவகுக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். டெக் மஹிந்திரா, மைண்ட்ட்ரீ, கோஃபோர்ஜ், எல்&டி இன்ஃபோடெக் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை திங்களன்று தலா 4% க்கும் அதிகமாகச் சரிந்தன.


Click it and Unblock the Notifications