அமெரிக்காவில் ரெசிஷன் கட்டாயம் வரும் எனப் பலரும் கணித்திருக்கும் நிலையில் பல துறைகள் பீதியிலேயே உள்ளது. குறிப்பாக இந்திய ஐடி துறை உச்சக்கட்ட பீதியில் இருக்கிறது என்றால் மிகையில்லை, அமெரிக்காவின் ரெசிஷன் உருவாகும் பட்சத்தில் இந்திய ஐடி துறையின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கும்.
ஆனால் இந்த மந்த நிலையிலும் சில குறிப்பிட்ட ஐடி நிறுவனங்களுக்கும் ஹைதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இருக்கும் ஐடி ஹப்-களுக்கு அதிகப் பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது.
அமெரிக்காவில் ரெசிஷன் வந்தால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு எந்த வகையில் லாபம் அளிக்கும்..?
ரெசிஷன்
பணவீக்கம் அதிகமாகி, பொருளாதாரம், வர்த்தகம் மந்தமாகும் போது தான் ரெசிஷன் உருவாகும். அப்படிப் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ரெசிஷனுக்குள் தள்ளப்பட்ட நிலையில் அனைத்துத் துறை நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்கவே அதிகப்படியான முயற்சிகளைச் செய்யும்.
அமெரிக்கா
அப்படிப் பார்க்கும் போது அமெரிக்காவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான டெக் சேவையைக் குறைந்த செலவில் செய்யவே திட்டமிடும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்குக் கூடுதல் வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பில்லியன் டாலர் திட்டங்கள்
இந்த ரெசிஷன் காலகட்டத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் அதிகளவில் கிடைக்கவில்லை என்றாலும் சில மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை அதிகளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா முழுவதும் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களுக்குப் பலன் அளிக்கும்.
இன்போசிஸ்
இன்போசிஸ் ஹைதராபாத் தலைவர் மனிஷா சபூ கூறுகையில் இந்த ரெசிஷன் காலகட்டத்தில் அதிகப்படியான வர்த்தகம் ஹைதராபாத் உட்பட நாட்டின் முக்கிய ஐடி நகரங்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அனிமேஷன், செமிகண்டக்டர், மொபிலிட்டி போன்ற துறைகளில் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவுட்சோர்சிங் வர்த்தகம்
மேலும் அவுட்சோர்சிங் வர்த்தகம் அதிகமாகக் கிடைக்கும் போது ஆபீஸ் ஸ்பேஸ் அதிகம் தேவைப்படும், இதனால் கமர்சியல் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடுபிடிக்கும். இது ஹைதராபாத், சென்னை, பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இருக்கும் ஐடி ஹப்-க்கு ஜாக்பாட் ஆக மாற உள்ளது.
ஆபீஸ் ஸ்பேஸ்
ஏற்கனவே இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைத்துள்ள நிலையில் ஆபீஸ் ஸ்பேஸ் டிமாண்ட் அதிகமாகவே உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகளில் ரெசிஷன் வரும் பட்சத்தில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தகம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது, ஆனால் இந்தச் சரிவை தாக்கு பிடிக்க முடியாத நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும் தூண்டும்.
வாழ்வா சாவா போராட்டம்
இந்த ரெசிஷன் பல நிறுவனங்களுக்கு வாழ்வா சாவா போராட்டமாக இருந்தாலும், சிலருக்கு ஜாக்பாட் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. இதேவேளையில் தான் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது.
செலவுகள் குறைப்பு
இதேபோல் தான் அவுட்சோர்சிங் செய்வது மூலம் டெக் சேவைக்கான செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க முடியும். குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் செய்வது மூலம் கூடுதலாகச் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.