வாடகை வீடு என்பது இந்தியாவில் பெரும்பாலான நகரவாசிகள் அனுபவிக்கும் ஒரு முக்கியமான வாழ்க்கை அனுபவம் ஆகும். இது வசதியும், சுதந்திரமும் தரக்கூடிய ஒரு சூழல். ஆனால், பல சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டு/மாதமும் வாடகை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லும்போது, வேறு வீடு பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் (சென்னை, பெங்களூரு) அட்வான்ஸ் தொகை (5-10 மாதங்கள்) அதிகமாகவே இருக்கும். அதை திரும்ப பெறுவது சில சமயங்களில் சிக்கல் ஆகும்.
அந்த வகையில், பெங்களூரு நகரில் வாடகைக்கு வீடு எடுக்கும்போது, கட்ட வேண்டிய டெபாசிட் பணம் குறித்து ரெடிட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதனால் பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்து சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பும், கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

பெரும் விவாதத்தை கிளப்பிய அந்த பதிவில், "வாடகை ரூ.20,000.. டெபாசிட் தொகை ரூ.2 லட்சம்" என்று மட்டும் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவை அடுத்து, சிலர் கர்நாடக தலைநகரில் வாடகைக்கு இருப்பவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். மேலும் சிலர் இதை கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளனர்.
ஒரு பயனர் தனது கருத்தில், "பெங்களூருவில் 10 மாத வாடகைக்குச் சமமான டெபாசிட் கேட்டால் சாதாரணமான விஷயமாக மட்டுமல்ல, அதைப் பலரும் ஏற்க வேண்டிய இயல்பான நடைமுறையாகவே கொண்டிருக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு பயனர், "புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களில் பொதுவாக 2 முதல் 3 மாதங்களுக்கே டெபாசிட் கேட்டாலும், பெங்களூருவில் நிலவும் வாடகை கலாச்சாரம் புதிதாக நகரம் நோக்கி வரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி முடித்தவர்களுக்கு மிகவும் சிரமமான சூழலை உருவாக்குகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த செலவில் வசதி செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தாலும், பெங்களூருவில் வீடு தேடுவது ஒரு பொருளாதார சவாலாக மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பயனர், "சென்னையிலும் இதே நிலைதான். எங்களுடைய வீட்டு வாடகை ரூ26,000. ஆனால், டெபாசிட் தொகை மட்டும் ரூ.2.6 லட்சம்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "இதெல்லாம் ஏற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக 10 பேர் இதை மறுத்து வந்தால், வீட்டு உரிமையாளர் நிச்சயம் மனம் இறங்கி வருவார்" என்று வலியுறுத்தியுள்ளார்.
10 மாத வாடகையை டெபாசிட்டாக தர வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக எங்கும் இல்லை என்றாலும், அது பெங்களூருவில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து தங்களுடைய விளக்கத்தையும் முன்வைக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "வாடகைதாரர்களிடம் இருந்து சேதங்களை வசூலிப்பது கடினமாக இருக்கிறது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக இவ்வாறு அதிக தொகை வசூலிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர், மற்ற நகரங்களில் குடியிருப்பு நலச்சங்கங்கள் (RWAs) வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு முன் "No Objection Certificate" (NOC) கோருவதாகவும், இதுபோல ஒழுங்குமுறை பெங்களூருவில் இல்லாததே இந்தக் கலாச்சாரத்தை தணிக்க முடியாத வகையில் வைத்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இதை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டே, பெங்களூருவில் வீடு தேடும் புதியவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள், வாடகையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத நிலையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications