இந்தியாவில் பல உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் கார்பனேடெட் குளிர்பானத்தில் பழச்சாறு அல்லது பழ கூழ் சேர்ந்து அதிகளவிலான வரி ஏய்ப்புச் செய்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஜிஎஸ்டி வரித் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதனால் உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள் 40 சதவீத வரி பிரிவுக்குச் செல்ல தயாராகியுள்ளது.
குளிர்பானம் மீதான வரி
இந்தியாவில் கோகோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் ஆகிய கார்பனேடெட் குளிர்பானங்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரியும், சின் கூட்ஸ் (Sin Goods) பிரிவில் கூடுதலாகச் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால் பழச்சாறு அல்லது பழ கூழ் கொண்ட குளிர்பானங்களுக்கு 12 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.
நரேந்திர மோடி
2014ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில், வெளிநாட்டுக் குளிர்பான நிறுவனங்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் பழச்சாறு அல்லது பழ கூழ் கொண்ட குளிர்பானத்தைத் தயாரிக்க வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பழச்சாறு அல்லது பழ கூழ் குளிர்பானங்களுக்குக் குறைவான வரி விதிக்கப்பட உள்ளதாக ஜிஎஸ்டி அமைப்புத் தெரிவித்தது.
வரி ஏய்ப்பு
இதைத் தொடர்ந்து பல குளிர்பான நிறுவனங்கள் கார்பனேடெட் குளிர்பானத்தில் பழ சாறு மட்டும் சேர்ந்து விற்பனை செய்ததில் அதிகளவிலான வரி ஏய்ப்புச் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல குளிர்பான நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டு அதிகளவிலான அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரி உயர்வு
இதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, என்சிஆர், உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருக்கும் பல உள்நாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தயாரிக்கும் பழ சாறு கலந்த கார்பனேடெட் குளிர்பானத்தை 12 சதவீத ஜிஎஸ்டி பிரிவில் இருந்து 40 சதவீத ஜிஎஸ்டி பிரிவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது
விலை உயரும் அபாயம்
இந்நிலையில் 40 சதவீத ஜிஎஸ்டி பிரிவுக்குச் செல்லும் போது குளிர்பானத்தின் விலை அதிகளவில் அதிகரிக்கும் இதனால் உள்ளூர் குளிர்பான நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் நிலை உருவாகும்.
இந்தியக் குளிர்பான சந்தையில் மொத்த மதிப்பு சுமார் 14,000 கோடி ரூபாயாகும்.