ஈரான் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் இன்னும் உயர வாய்ப்புள்ளது. இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய் முழுவதுமாக வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து பெட்ரோல், டீசலாக மாற்றி விற்பனை செய்கிறது. இதனால் ஈரான் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பால் , காய்கறி, மளிகை என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துகிறது. இந்த சூழலில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள 'E20' எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டத்தையும் கடந்து, பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பதைத் ஊக்குவிக்கும் வகையில், 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு மத்திய அரசு மத்திய கலால் வரி விலக்கை நீட்டித்துள்ளது. இதுநாட்டில் எத்தனால் பெட்ரோல் பயன்பாட்டை இன்னும் ஊக்குவிக்கும்.

இதன்படி,
E22: 22% எத்தனால் + 78% பெட்ரோல்
E25: 25% எத்தனால் + 75% பெட்ரோல்
E27: 27% எத்தனால் + 73% பெட்ரோல்
E30: 30% எத்தனால் + 70% பெட்ரோல்
ஆகிய நான்கு புதிய எரிபொருள் வகைகளுக்கும் கலால் வரி நீக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளதால் , சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு இந்த எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
சாதாரண பெட்ரோல் என்பது பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் (Fossil fuel) இருந்து கிடைக்கிறது. எத்தனால் என்பது தாவரங்கள் மற்றும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க உயிர் எரிபொருள் (Biofuel) ஆகும். சாதாரண பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் சற்றே குறைவுதான். ஆனால், இது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையையும், காற்று மாசுபாட்டையும் பெருமளவு குறைக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் சாதாரண பெட்ரோல் ஒரு லிட்டர் 107.87 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 20 % எத்தனால் கலந்த பெட்ரோல் ஒரு லிட்டர் 103.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே ஒரு லிட்டர் பெட்ரோலில் உங்களுக்கு 5 ரூபாய் வரை சேமிக்க முடியும். எத்தனால் கலப்பு அதிகரிக்க அதிகரிக்க பெட்ரோல் விலை குறையும். கிட்டதட்ட 20 ரூபாய் வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறையும். ஒரு நபர் மாதம் 15 லிட்டர் பெட்ரோல் தன் வாகனத்தில் பயன்படுத்துகிறார் என்றால் சாதாரண பெட்ரோல் வாங்க 1,618 ரூபாய் செலவு செய்வார். ஆனால் இந்த விலை நிலையானது இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப விலை கூட வாய்ப்புள்ளது. இதுவே ஈ20 பெட்ரோல் வாங்கினால் 1,546 ரூபாய் செலவிடுவார். அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால் 300 ரூபாய் வரை சேமிக்கலாம்.
ஆனால் புதிய E22, E25, E27 அல்லது E30 ரக எரிபொருட்களை உங்கள் வாகனத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் வாகனத்தின் Fuel Capஇல் இதற்கான அனுமதி உள்ளதா என்று பார்க்க வேண்டும். பழைய வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தினால், எரிபொருள் குழாய்கள் பாதிக்கப்படலாம் என்பதால் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications

