இந்தியாவில் முழுவதும் தற்போது முக்கியப் பேசுபொருளாக இருப்பது கிரிப்டோகரன்சி தான், பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறிய டவுன் கிராமம் வரையில் கிரிப்டோகரன்சி குறித்துப் பேசப்பட்டு வருகிறது. இதேவேளையில் கிரிப்டோகரன்சி பெயரில் பல மோசடிகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் இந்தியாவில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிடப்பட்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோ மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் திட்டமிடப்பட்டுக் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.
இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்து முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்தக் கூட்டு முயற்சி வேண்டும். தொழில்நுட்பம் வேகமாகத் தொடர்ந்து வளர்ச்சி அடையும் காரணத்தால் கூட்டு முயற்சி தேவை எனக் கூறியுள்ளார்.
InFinity Forum
இந்தியாவில் பின்டெக் துறை சார்ந்த InFinity Forum வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தைப் பிரதமர் மோடி வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாகத் துவங்கி வைத்தார். இக்கூட்டத்தில் தான் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறை குறித்துப் பேசினார்.
IFSCA அமைப்பு
InFinity Forum மாநாட்டைச் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) இந்தியா அரசின் சார்பாக GIFT சிட்டி மற்றும் ப்ளூம்பெர்க் கூட்டணியில் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மோடி, நிர்மலா சீதாராமன், முகேஷ் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கிரிப்டோகரன்சி ஒழுங்கு முறைப்படுத்த
இக்கூட்டத்தில் தான் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்த நிர்வாகம் மற்றும் சட்டதிட்டங்கள் வாயிலாகச் செய்வது தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது மட்டுமே, தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.
முக்கியக் கூட்டம்
இந்த முக்கியமான கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய் தலைமையிலான கூட்டத்தில் இந்தோனேசியாவின் நிதியமைச்சர் முல்யானி இந்திராவதி மற்றும் மலேசியாவின் நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.