இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது வருடாந்திர பொது கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சாதனைகள் பற்றியும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு என்ன அறிவிப்பு எல்லாம் வரப்போகிறதோ? என்ற பெருத்த எதிர்பார்ப்பினை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
முதல் கார்ப்பரேட் நிறுவனம்
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் கடுமையான சூழல் இருந்து வருகின்றது. சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பணவீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. ஆனாலும் இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில் அதன் வருடாந்திர வருவாயில் 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஏற்றுமதியில் சாதனை
ரிலையன்ஸின் வருவாய் விகிதமானது 47% அதிகரித்து, 104.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் எபிடா விகிதம் 1.25 லட்சம் கோடி ரூபாயினை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸின் ஏற்றுமதி விகிதமும் 75% மேலாக அதிகரித்து, 2,50,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு 6.8% ஆக இருந்த இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, 8.4% ஆக அதிகரித்துள்ளதாகவும் முகேஷ் அம்பானி வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் சாதனை படைத்துள்ளது. அதன் மொத்த வணிகத்தில் 2.32 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது இதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸும் ஒன்றாக உள்ளது.
அதிக வரி செலுத்துபவர்
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து அதிக அளவில் வரி செலுத்தும் ஒரு நிறுவனமாகவும் உள்ளது. இந்த தேசிய கருவூலத்திற்கு மட்டும் 1,88,000 கோடி ரூபாய் பங்களித்துள்ளதாகவும் அம்பானி கூறியுள்ளார்.