ரிலையன்ஸ். இந்த பெயருக்கோ அல்லது பெயருக்கு காரணமாக இருந்த திருபாய் அம்பானிக்கு, தற்போது கம்பெனியை வழி நடத்தும் முகேஷ் அம்பானிக்கோ அறிமுகம் தேவை இல்லை.
1960-களில் வெறும் ஒரு பாலியஸ்டர் வியாபாரமாகத் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ், இன்று கச்சா எண்ணெய் தொடங்கி டெலிகாம், ரீடெயில் வரை தன் வியாபார கிளைகளைப் பரப்பி வளர்ந்து கொண்டு இருக்கிறது.
சரி இந்த 43-வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் என்ன சொன்னார் முகேஷ் அம்பானி? வாருங்கள் முக்கிய விவரங்களைப் பார்ப்போம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மொத்த ஆண்டுப் பொதுக் கூட்டமே ஜியோ மீட் செயலியில் நடந்தது என்பதில் தொடங்குகிறது ரிலையன்ஸ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்.
சாதனை படைத்த ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவிலேயே யாரும் தொடாத புதிய உச்சமாக 150 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் EBITDA 1,00,000 கோடி ரூபாயைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு தனியார் கம்பெனியின் எபிட்டா 1 லட்சம் கோடி ரூபாயைத் தொடுவதும் இதுவே முதல் முறை.
கன்ஸ்யூமர் வியாபாரங்கள்
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரிலையன்ஸின் வருவாயில் கணிசமான பகுதி கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன், எனர்ஜி போன்ற வியாபாரங்களில் இருந்து மட்டுமே வந்து கொண்டு இருந்தது. ஆனால் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் மொத்த எபிட்டா வருவாயில் 35 % வருவாய் டெலிகாம், ரீடெயில் போன்ற கன்ஸ்யூமர் சார்ந்த வியாபாரங்களில் இருந்து வந்து கொண்டு இருக்கிறதாம்.
இந்தியாவில் நம்பர் 1
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் (Total Merchandise Export) 9.1 % ஏற்றுமதியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி 109 நாடுகளுக்குச் செய்து இருக்கிறார்களாம். சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி இது. அதே போல சுமாராக 21,650 கோடி ரூபாயை சுங்க வரி மற்றும் கலால் வரியாகச் செலுத்தி இருக்கிறார்களாம். இந்தியாவிலேயே எந்த ஒரு தனியார் கம்பெனியும் இந்த அளவுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்தது இல்லை. அதே போல இவ்வளவு கோடி ரூபாய் வரிகளையும் செலுத்தியது இல்லையாம்.
ஜிஎஸ்டி & வருமான வரி
அதே போல இந்தியாவிலேயே அதிகமாக ஜிஎஸ்டி & வாட் செலுத்தும், விரல் விட்டு எண்ணக் கூடிய தனியார் கம்பெனிகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியும் ஒன்றாம். கடந்த ஆண்டு 69,372 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறார்கள். அதே போல வருமான வரியாக 8,386 கோடி ரூபாயைச் செலுத்தி இருக்கிறார்களாம். இந்த கொரோனா காலத்திலும் ரிலையன்ஸின் தொழிற்சாலைகள் 90 % கெபாசிட்டிக்கு இயங்கிக் கொண்டு இருக்கிறதாம்.
5ஜி ரெடி
இந்திய டெக்கிக்கள் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 5ஜி தொழில் நுட்பம், ஜியோவில் தயாராக இருக்கிறதாம். அடுத்த ஆண்டு களத்தில் இறக்கப் போகிறார்களாம். இந்தியாவில் 5ஜி ஏலம் வந்த பின் ஜியோ விரைவில் களம் இறக்கும் எனவும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இந்திய டெலிகாமில் 4ஜி பஞ்சாயத்துக்கள் முடிவதற்குள் அம்பானி 5ஜிக்கே தயாராகிவிட்டாரே..!
ஜியோ டிவி
இதுவரை நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், வூட், ஹாட் ஸ்டார்... போன்ற பல வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளுக்கு தனித் தனியாக கட்டணம் செலுத்தி தனித் தனியாக லாக் இன் செய்து கொண்டு இருந்தோம். ஆனால் இனி ஜியோ டிவியில் ஒரே க்ளிக்கில் எந்த வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியையும் பயன்படுத்தலாம் எனச் சொல்லி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் அம்பானி.
ஜியோ க்ளாஸ் (Jio Glass)
ஜியோ டிவியைத் தொடர்ந்து ஜியோ க்ளாஸ் அரிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு mixed reality headset. இதன் மூலம் holographic video calling செய்ய முடியும். இதை அறிமுகப்படுத்தி இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். மிக முக்கியமாக கூகுள் நிறுவனம் ஜியோவின் 7.7 சதவிகித பங்குகளை 33,737 கோடிக்கு வாங்க இருப்பதையும் உறுதி செய்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.
ஸ்மார்ட்ஃபோன்கள்
இந்தியாவில் இதுவரை ஜியோ நிறுவனம், 100 மில்லியன் (10 கோடி) ஸ்மார்ட்ஃபோன்களை விற்று இருக்கிறோம். ரிலையன்ஸ் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களைக் கூட தயாரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அதற்கான Operating System-த்தை கூகுள் மற்றும் ஜியோ இணைந்து இந்தியாவில் தயாரிக்க இருக்கிறார்களாம்.
ரீடெயில் வியாபாரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் லாபகரமான ரீடெயில் கம்பெனி. ஒட்டு மொத்த 12,000 ரீடெயில் கடைகளில் 3-ல் 2 பங்கு கடைகள் இந்தியாவின் டயர் 2, டயர் 3, டயர் 4 சிறு நகரங்களில் தான் இருக்கிறதாம். 80 % காய்கறிகள் & பழங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்குகிறார்களாம். ஆக ரீடெயிலில் இன்னமும் ரிலையன்ஸ் பெரிதாக செய்ய இருக்கிறது.
சவுதி அராம்கோ
உலகின் மிகப் பெரிய கம்பெனியான சவுதி அராம்கோ கம்பெனி உடன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்து கொள்ள இருந்த டீல், கொரோனா வைரஸால் எதிர்பார்த்தது போல முன்னேறவில்லை. இருப்பினும் சவுதி அராம்கோ கம்பெனி உடன் நீண்ட காலத்துக்கு பணியாற்றுவோம் எனச் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதோடு oil-to-chemicals (O2C) வியாபாரத்தை தனி துணை நிறுவனமாக மாற்றவும் இருக்கிறார்களாம்.
2035-க்குள் கார்பன் நியூட்ரல்
வரும் 2035-ம் ஆண்டுக்குள் ரிலையன்ஸ் கம்பெனி, ஒரு நிகர கார்பன் நியூட்ரல் கம்பெனியாக மாற இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்களாம். எரி சக்தித் துறை, உலகத்தோடு ஒத்துப் போகும் மரபு சாராத, சுத்தமான எரி சக்தியை உலகத்துக்கு கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார் முகேஷ் அம்பானி.