யானைக்கும் அடி சருக்கும் என்பது போல 100 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் எனப் பெயர் வாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய தவறை தனது வர்த்தகத்தில் செய்துள்ளது.
இதனால் முகேஷ் அம்பானி ரீடைல் எரிபொருள் வர்த்தகக் கனவு மீண்டும் தோல்வி அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவில் அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக ரீடைல் எரிபொருள் விற்பனையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நீண்ட காலமாக முகேஷ் அம்பானி தனி ஆளாய் போட்டிப்போட்டு வந்தார்.
BP உடன் கூட்டணி
இந்த நிலையில் சமீபத்தில் பிரிட்டன் எரிபொருள் நிறுவனமான BP உடன் கூட்டணி அமைத்து அனைத்து ரீடைல் எரிபொருள் வர்த்தகத்தையும் ஜியோ-BP என்ற கூட்டணிக்குள் கொண்டு வந்தது. ஆனாலும் தற்போது பிரச்சனை தலைக்கு மீறி சென்றுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் பிரச்சனைக்குப் பின்பு எரிபொருள் விநியோகத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும் பிரச்சனை உருவானது. இதில் முக்கியமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வும், மத்திய அரசின் சில ரூபாய் விலை குறைப்பும், ரிலையன்ஸ்-க்கு வந்த பிரிட்டன் டீசல் ஏற்றுமதி ஆர்டரும் பெரும் பெரிய நெருக்கடியை உருவாக்கியது.
ஏற்றுமதி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டீசல் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக லாபத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், போதுமான எரிபொருள் இந்தியாவில் இருக்கும் பெட்ரோல் பங்க்-களுக்கு ரிலையன்ஸ் மூலம் அனுப்ப முடியவில்லை.
டீலர்கள்
இதேவேளையில் அரசு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பெட்ரோல், டீசல் விலைக்கு இணையான விலையில் ரிலையன்ஸ் தனது டீலர்களுக்குக் கொடுக்க முடியாத காரணத்தாலும் தற்போது ஜியோ-BP பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இழப்பீடு
இதனால் பல ஜியோ-BP பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தனது விற்பனையகங்களை மொத்தமாக மூடிவிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.
மார்ச் 16 முதல்
ஜியோ-BP நிர்வாகம் மார்ச் 16ஆம் தேதியில் இருந்து தனது பெட்ரோல் பங்க்-களுக்கு எரிபொருள் விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இன்று வரையில் விநியோக அளவு சரி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
லிட்டருக்கு 10-12 ரூபாய் நஷ்டம்
ஜியோ-BP டீலர்கள் பெட்ரோல் பங்க்-ஐ மூடுவதைத் தடுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்டருக்கு 10-12 ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் மொத்த பிரச்சனையும் சமாளிக்கப் பெரும் தொகையை நிவாரணமாக அளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2008 சம்பம்
2008 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாறாக, அதிகக் கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தின் ஆதரவின்மை காரணமாகச் சில்லறை விற்பனை நிலையங்களை மூடியபோது டீலர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்தது, பங்க்-களை மூடுவதில் இருந்து தடுத்தது. தற்போது இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.