நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்கு எல்லாம் என்ன பெரிய கனவாக இருக்கும்..? நல்ல சம்பளம், மனதுக்கு பிடித்த வேலை, அன்பான குடும்பம், சொந்த வீடு, கார், வங்கியில் ஒரு கோடி ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட்.. இவ்வளவு தான்.
ஆனால் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, திலிப் சிங்வி, ராதா கிஷன் தமானி போன்ற இந்தியாவின் டாப் பில்லியனர்களுக்கு எல்லாம் என்ன கனவு இருக்கும்.
தங்கள் நிறுவனத்தை எத்தனை மடங்கு பெரிதாக வளர்த்து எடுப்பது..? எவ்வளவு மடங்கு லாபம் பார்ப்பது போன்ற பெரிய கனவுகள் இருக்கும்.
நம்பர் 1
இந்த பெரிய எண்ணங்களுக்கு மத்தியில் வந்து போகும் விஷயம் தான் இந்த நம்பர் 1 பட்டியல்கள் எல்லாம். இப்போது அப்படிப்பட்ட நம்பர் 1 இடத்தைத் தான் மீண்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வழியாக பிடித்து இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி.
டாடா வருகை
கடந்த மார்ச் 09, 2020 அன்று டாடாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாராக 7.50 லட்சம் கோடியாக இருந்தது. அப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு சுமாராக 7.29 லட்சம் கோடியாக இருந்தது. எனவே மார்ச் 09 அன்று டிசிஎஸ் தான் இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக முதலிடத்தை தட்டிப் பறித்தது.
காரணம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் மார்ச் 09 அன்று ரிலையன்ஸின் பங்கு விலை சுமாராக 1,113-ல் வர்த்தகம் நிறைவடைந்தது. ரிலையன்ஸ் பங்கு விலை உயர திணறியது என்றே சொல்லலாம்.
3 மாதத்தில் பெரிய சரிவு
கடந்த மார்ச் 09, திங்கள் அன்று, ஒரே நாளில் 157 ரூபாய் (சுமார் 13 சதவிகிதம்) சரிந்தது ரிலையன்ஸின் பங்கு விலை. ரிலையன்ஸின் உச்ச விலையான 1,617 ரூபாயில் இருந்து, கடந்த 3 மாத காலத்துக்குள் சுமாராக 504 ரூபாய் சரிந்தது.
சந்தை மதிப்பு
கடந்த, டிசம்பர் 2019-ல் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு சுமாராக 10 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. எனவே 10 லட்சம் கோடி என வைத்துக் கொள்வோம். மார்ச் 09 அன்று வெறும் 7.30 லட்சம் கோடி ரூபாய் தான் ரிலையன்ஸின் சந்தை மதிப்பாக இருந்தது. ஆக 10.00 - 7.30 = 2.70 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போனது. எனவே தன் முதலிடத்தை டிசிஎஸ் நிறுவனத்திடம் பறி கொடுத்தது ரிலையன்ஸ்.
சரிந்த டிசிஎஸ்
மார்ச் 09-ம், திங்கட்கிழமை தேதி டிசிஎஸ் பங்கு விலை பெரிதாகச் சரியவில்லை. ஆகையால் அன்று டிசிஎஸ் முதலிடம் பிடித்து இருந்தது. அன்று டிசிஎஸ் எப்படி சரியாமல் நின்று விளையாடியதோ, அதே போல மார்ச் 13 அன்று ரிலையன்ஸ் ஓரளவுக்கு நின்று விளையாடிது.
மீண்டும் ரிலையன்ஸ்
விளைவு, ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 7.01 லட்சம் கோடியாக இருக்கிறது. டிசிஎஸ்-ன் சந்தை மதிப்பு 6.78 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. எனவே இப்போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், மீண்டும் இந்தியாவிலெயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.
சீசா விளையாட்டு
மீண்டும் ரிலையன்ஸின் பங்கு விலை குறைந்து, டிசிஎஸ்-ன் பங்கு விலை குறையாமல் இருந்தால், மீண்டும் டிசிஎஸ் நம்பர் 1 இடத்துக்கு வர வாய்ப்பு இருக்கிறது. சந்தை நிலையற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் ஒரு பக்கம் அடித்துக் கொள்கிறார்கள் என்றால், மறு பக்கம் இந்த இரண்டு பெரிய கம்பெனிகளுக்கு மத்தியில் ஒரு போட்டி ஓடிக் கொண்டே இருக்கிறது. யார் முதலிடத்தில் நிலைத்து நிற்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்.