இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யக் கோரி ரிலையன்ஸ் ரீடைல்-ன் சக போட்டி நிறுவனமான அமேசான்.காம்-இன் தாய் நிறுவனம் அமேசான், சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்துள்ளது.
இந்திய ரீடைல் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் எனக் கருதப்பட்ட ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் டீல்-க்குப் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்புகளையும், வர்த்தக ஆதாரங்களையும் பெற்றது.
இதுமட்டும் அல்லாமல் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ரீடைல் ஸ்பேஸ் 53 மில்லியன் சதுரடியாகவும், கிடங்கு பகுதி 18 மில்லியன் சதுரடியாகவும் உயர்ந்து உலகிலேயே 3வது பெரும் ரீடைல் நிறுவனமாக இருக்கும் டெஸ்கோ நிறுவனத்தைக் காட்டிலும் இடவசதியில் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.
இந்த மாபெரும் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக் கோரி தான் அமேசான் வழக்கு தொடுத்துள்ளது. என்ன பிரச்சனை வாங்க பார்ப்போம்.
அமேசான்
பியூச்சர் குரூப் ரீடைல் வர்த்தகத்தில் அமேசான் மறைமுகப் பங்குகளைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்திருந்தது, இந்த ஒப்பந்தத்தை மீறி பியூச்சர் குரூப் வர்த்தகம் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் பியூச்சர் குரூப்-ல் இருந்து ரிலையன்ஸ் ரீடைல் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் வர்த்தக ஆதாரங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இவ்விரு நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும் என அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) கோரியுள்ளது.
சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையம்
Singapore International Arbitration Centre (SIAC) என்பது ஒரு லாபமற்ற அமைப்பு, இந்த அமைப்பு வெளிநாட்டு நிறுவனங்கள், தனது சொந்த நாடு இல்லாமல் வெளிநாடுகளில் சந்திக்கும் வர்த்தகப் பரிமாற்ற பிரச்சனைகளை நீதிமன்றங்களைத் தாண்டி சரிசெய்யும் ஒரு முக்கியமான அமைப்பு.
இந்த அமைப்பில் தான் தற்போது அமேசான் தனது கோரிக்கையை வழக்காகப் பதிவு செய்துள்ளது.
நோட்டீஸ்
அமேசான் நிறுவனம் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பியூச்சர் குருப் தனது பங்குகளை ரிலையன்ஸ் குழுமத்திற்கோ, அல்லது வேறு எந்தப் போட்டி நிறுவனத்திற்கோ விற்பனை செய்யக் கூடாது. இப்படி விற்பனை செய்தால் மறுப்பு தெரிவிக்கும் உரிமை தனக்கு உண்டு, இதை ஒப்பந்தப்படி மீறியது குற்றம் என அமேசான், பியூச்சர் கூப்பன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனுமதி
மேலும் பியூச்சர் குருப் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குத் தனது பங்குகளையும் வர்த்தகத்தையும் விற்பனை செய்யும் போது எவ்விதமான அனுமதியும் அமேசான் நிறுவனத்திடம் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அமேசான் மற்றும் பியூச்சர் குருப் நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தத்தில் தனது அனுமதி இல்லாமல் பங்குகளை யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அமேசான் விளக்கம் கொடுத்துள்ளது.
1500 கோடி ரூபாய்
கடந்த வருடம் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
இந்த 49 சதவீத பங்குகள் மூலம் அமேசான், பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தில் மறைமுகமாக 5 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாகப் பொருள். இந்தி பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கீழ் தான் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம், பிக் பஜார் மற்றும் ஈசிடே ஆகிய வர்த்தகங்கள் உள்ளது.
வெளிநாட்டு முதலீடு
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளிநாட்டு உரிமை விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பே, அமேசான் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால் அமேசான் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது.
1500 கோடி ரூபாய் முதலீட்டால், பியூச்சர் குரூப் வர்த்தகம் மற்றும் நிறுவனத்தைக் கைப்பற்ற முதல் உரிமை அமேசான் நிறுவனத்திற்குத் தான் உள்ளது. இந்த விற்பனை 3 முதல் 10 வருடத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிஷோர் பியானி தனது 12,778 கோடி ரூபாய் கடனை தீர்க்க அவசரமாக விற்பனை செய்துள்ளார்.