கடந்த சில தினங்களாகவே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு (Market Capitalization) தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
நேற்றைய கணக்குப் படிப் பார்த்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை 1,935 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
நேற்று அதிகபட்ச ரிலையன்ஸ் பங்கு விலை, 1,947.70 ரூபாயைத் தொட்டு முதலீட்டாளர்களின் வாயை பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கைப் பார்த்தால் 2,000 ரூபாயைக் கூட ரிலையன்ஸ் தொட்டு விடும் போலத் தான் தெரிகிறது.
1,935 ரூபாய்
சரி நேற்றைய கதைக்கு வருவோம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை, 1,935 ரூபாய்க்கு நிறைவடைந்ததால், சந்தை மதிப்பு, நேற்று (13 ஜூலை 2020) ரிலையன்ஸின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து இருக்கும் என உறுதியாகச் சொல்லலாம்.
சந்தை மதிப்பு
இந்த சந்தை மதிப்பு அடிப்படையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி, உலகின் 51-வது மிகப் பெரிய கம்பெனி என்கிற பட்டத்தை பெற்று இருக்கிறது. ஆசியாவிலேயே 9-வது அதிக சந்தை மதிப்பு கொண்ட கம்பெனி என்கிற பட்டத்தையும் பெற்று இருக்கிறது. முகேஷ் அம்பானி தன் விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறார் போலிருக்கிறதே! திருபாய் அம்பானி காலத்தில் பாலியஸ்டர் துணியை வியாபாரம் செய்யும் கம்பெனியாகத் தொடங்கிய, ரிலையன்ஸ் இன்று கச்சா எண்ணெய் முதல் டெலிகாம், ரீடெயில் வரை தன் கிளையைப் பரப்பி விஸ்தரித்து வளர்ந்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை இப்படி அதிகரிக்க, ரிலையன்ஸ் ஜியோ மிக முக்கிய காரணம். கடந்த சில மாத காலமாகவே, ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை, ஃபேஸ்புக் தொடங்கி, கே கே ஆர், ஜெனரல் அட்லாண்டிக், க்வால் காம், இண்டெல், போன்ற பல பெரிய கம்பெனிகளே முதலீடு செய்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பங்கு விலை பற்ற வைத்த ராக்கெட் போல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நிகர கடன் இல்லா கம்பெனி
அது போல 53,124 கோடி ரூபாய்க்கு வெளியிட்ட உரிமைப் பங்குகள் வேறு ரிலையன்ஸ் கஜானாவை நிறைத்துக் கொண்டு இருக்கிறது. வரும் 31 மார்ச் 2021-க்குள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை நிகர கடன் (Net Debt) இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொல்லி இருந்தார் முகேஷ் அம்பானி. ஆனால் குறித்த தேதிக்கு சுமாராக 7 - 8 மாதங்களுக்கு முன்பே கடன்களை எல்லாம் காலி செய்துவிட்டார் முகேஷ் அம்பானி.