இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி கொரோனா தொற்றால் பாதித்துள்ள வர்த்தகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு மார்ச் 31, 2021ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தை முழுமையாக மறுத்துள்ளார்.
இதன் மூலம் கடந்த நிதியாண்டுக்கான முகேஷ் அம்பானியின் சம்பளம் பூஜ்ஜியம் மட்டுமே. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர அறிக்கையிலும் முகேஷ் அம்பானியின் சம்பளம் நில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பாலிமர், டெலிகாம், ரீடைல் எனப் பல துறையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பங்கு மதிப்பு முதல் வர்த்தகம் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது.
ரூ.2 லட்சம் கோடி முதலீடு
2020 மே மாதம் முதல் முகேஷ் அம்பானி தனது ஜியோ மற்றும் ரீடைல் பங்குகள் விற்பனை மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்த காரணத்தால் வர்த்தக அளவில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏற்படவில்லை என்றாலும் பங்கு மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு என்பது வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
முகேஷ் அம்பானி சம்பளம்
இந்நிலையில் கடந்த 15 வருடமாக, முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தனது பணிக்காக வருடம் 15 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வருகிறார். இந்த வருடம் இந்தக் கொரோனா காரணமாக ரிலையன்ஸ் ஊழியர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி தனது சம்பளத்தை முழுமையாகக் கைவிட்டு உள்ளார்.
முகேஷ் அம்பானியின் உறவினர்கள்
முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மெஸ்வானி, ஹிட்டால் மெஸ்வானி ஆகியோர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் நிர்வாகப் பதவியில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வருடம் 24 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்று வருகின்றனர். இதில் சுமார் 17.28 கோடி ரூபாய் தொகை கமிஷன் மட்டுமே.