முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் மற்றும் டெலிகாம் துறை வர்த்தகத்திற்கு போதுமான முதலீட்டைப் பெற்றுள்ள நிலையில் தற்போது முழுவீச்சாகக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல், கச்சா எண்ணெய் சார்ந்த வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் புதிய கூட்டணி, புதிய முதலீட்டைப் பெறக் களத்தில் இறங்கியுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.5 வருடத்திற்கு முன்பாக அபுதாபி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் தற்போது செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அபுதாபி நாடு
அபுதாபி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி-யின் (ADNOC) எண்ணெய் தளம் அமைந்திருக்கும் அல் ருவாய்ஸ் பகுதியில், புதிதாக எத்திலீன் டைக்ளோரைடு தயாரிக்க ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
ஒரு கூட்டணி நிறுவனம்
இப்புதிய தொழிற்சாலைக்காக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அபுதாபி நாட்டின் அரசு கச்சா எண்ணெய் நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) புதிதாக ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கப்பட உள்ளது.
1.5 பில்லியன் டாலர் முதலீடு
இப்புதிய எத்திலீன் டைக்ளோரைடு தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க இரு தரப்பு சுமார் 1.2 முதல் 1.5 பில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இப்புதிய எத்திலீன் டைக்ளோரைடு தயாரிப்பு தொழிற்சாலையில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கு வாய்ப்பு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
வளைகுடா நாடுகளிலேயே மிகப்பெரிய எண்ணெய் தளம் கொண்ட பகுதியாக அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி உள்ளது இந்த மாபெரும் எண்ணெய் தளத்தில் இந்திய நிறுவனம் கூட்டணி முறையில் புதிய தொழிற்சாலையை அமைக்கிறது. இதேபோல் இப்பகுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 1.2 முதல் 1.5 பில்லியன் டாலர் முதலீடு தான் அதிகப்படியான முதலீடு.
சவுதி அராம்கோ
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து சுமார் 15 முதல் 25 சதவீதம் வரையிலான பங்குகளைச் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ-விற்கு விற்பனை செய்ய சில வருடங்களுக்கு முன்பு முடிவு செய்துள்ளது.
ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு
இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் புதிதாக 1.25 லட்சம் கோடி ரூபாய் முதல் 1.50 லட்சம் கோடி ரூபாய் வரையில் முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இத்திட்டம் நீண்ட காலமாகத் தாமதம் ஆன நிலையில் இத்திட்டத்தை வேகப்படுத்த ரிலையன்ஸ் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிர்வாகக் குழு
சமீபத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் மிகப்பெரிய தூணாக இருந்து வரும் ஓய்.பி திரிவேதி, ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், இந்த இடத்தில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோ-வின் தலைவர் யாசி அல் ருமேயான் இணைந்துள்ளார்.
2 மடங்கு வளர்ச்சி
இப்படி அடுத்தடுத்து முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் எண்ணெய் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேகமாக இயங்கி வருகிறார். இதன் மூலம் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் வர்த்தகம் 2 மடங்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வளர்ச்சியில் குறைந்தது 50000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.