இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை எனர்ஜி, டெலிகாம், ரீடைல் என 3 பெரும் பிரிவுகளாகப் பிரித்து இருந்தாலும் இப்பிரிவுக்குள் பல துணை பிரிவுகளையும் கிளை நிறுவனங்களையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்துள்ளது. இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நீண்ட காலமாக இயங்கி வரும் துறை தான் டெக்ஸ்டைல்ஸ்.
தற்போது டெக்ஸ்டைல் பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் திட்டத்துடன் இறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, திவாலான ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் மிகவும் தீவிரமாக உள்ளார்.
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவில் மிகவும் பிரபலமான வாட்டர் டாங்க் தயாரிக்கும் பிராண்டு தான். ஆனால் 2017ல் வாட்டர் டாங்க் தயாரிக்கும் வர்த்தகம் மற்றும் அனைத்து சொத்துக்களையும் சின்டெக்ஸ் பிளாஸ்டிக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரிக்கப்பட்டது.
இதன் மூலம் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யார்ன் (நூல்) தயாரிப்பு வர்த்தகம் மட்டுமே உள்ளது.
குஜராத்
குஜராத்-தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது முக்கிய முதலீட்டாளரான இன்வெஸ்கோ நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய 15.4 கோடி ரூபாய் பேமெண்ட்-ஐ செலுத்தாத காரணத்தால் அகமதாபாத் NCLT நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
7,534.6 கோடி ரூபாய் கடனை
இந்த வழக்கின் விசாரணையில் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 நிதி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய 7,534.6 கோடி ரூபாய் அளவிலான கடனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 2021ல் இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கப்பட்டு, தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வெல்ஸ்பன்
இந்த நிலையில் சின்டெக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை விற்பனை செய்ய இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த நிறுவனங்கள் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 10க்கும் அதிகமான நிறுவனங்கள் சின்டெக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றப் போட்டிப்போட்ட நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வெல்ஸ்பன் ஆகிய இரு நிறுவனங்களும் சின்டெக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் உள்ளன.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தனியாகக் கைப்பற்றாமல் ACRE என்னும் நிறுவன மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்ற உள்ளது. இதேபோலத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலோக் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியது.
2,863 கோடி ரூபாய்
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கூட்டணி 2,863 கோடி ரூபாய் உடன் 10 சதவீத நிறுவனப் பங்குகளைச் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் முகேஷ் அம்பானிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகம்.
பங்கு பங்கீடு
இந்த வெல்ஸ்பன் உடனான போட்டியில் வெற்றிபெற்றால் சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 79 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம், 11 சதவீத பங்குகளை ACRE-ம், சின்டெக்ஸ் கடனாளர்களுக்கு 10 சதவீத பங்குகளையும் பெற உள்ளனர்.