இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து புதுபுது வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வரும் இதேவேளையில் தற்போது செய்து வரும் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டும், அதற்கான பணிகளையும் செய்து வருகிறது.
அந்த வகையில் நீண்ட நாட்களாக முதலீட்டாளர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வரும் சவுதி ஆராம்கோ உடனான 15 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு விற்பனை திட்டத்தைத் தற்போது முக்கிய இலக்காக முகேஷ் அம்பானி கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ரீடைல், டெலிகாம், பைபர் வர்த்தகம், நெட்வொர்க் விரிவாக்கம் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்தி வந்த முகேஷ் அம்பானி தற்போது தனது ஆஸ்தான வர்த்தகமான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைச் சீரமைப்புச் செய்யக் களத்தில் இறங்கியுள்ளார் முகேஷ் அம்பானி..!
கச்சா எண்ணெய் வர்த்தகம்
முகேஷ் அம்பானி மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் நிர்வாகக் குழு ஞாயிற்றுக்கிழமை நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்து கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகத்தை ஒன்றாக இணைத்து ஒரு தனிப் பிரிவாக மறுசீரமைப்பைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் சொத்துக்களையும், இதேபோல் சுத்திகரிப்பு மற்றும் சில்லறை எரிபொருள் விற்பனை மற்றும் விமான எரிபொருள் வர்த்தகத்தில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் வர்த்தகத்தை ஒன்றாக இணைக்கப் பணிகள் திங்கட்கிழமை துவங்கப்பட்டுள்ளது.
உரிமை
இந்த மாற்றத்தால் வர்த்தகம், செயலாக்கம், உரிமை அனைத்தும் ரிலையன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இந்தச் சீரமைப்பின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தைத் தனிப்பட்ட முறையில் மதிப்பீட்டு செய்யவும், இத்தனிப்பட்ட வர்த்தகத்தின் பங்குகளை எளிதாக விற்பனை செய்யவும் முடியும்.
சவுதி ஆரம்கோ டீல்
கடந்த ஏப்ரல் மாதம் முகேஷ் அம்பானி விரைவில் சவுதி ஆரம்கோ உடனான ஒப்பந்தம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது ரீடைல் வர்த்தகம், டெலிகாம் வர்த்தகம், பைபர் வர்த்தகம், நெட்வொர்க் விரிவாக்கம் பணிகள் அனைத்தையும் ஒரம்கட்டிவிட்டு கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முகேஷ் அம்பானி மறு சீரமைப்பு செய்கிறார் என்றால் சவுதி ஆரம்கோ உடனான ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் எனக் கணிப்பு நிலவுகிறது.
15 பில்லியன் டாலர்
உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமாக விளங்கும் ஆராம்கோ, சவுதி அரசு நிறுவனமாகும். ஆசியச் சந்தையில் ஆராம்கோ வர்த்தக விரிவாக்கத்திற்காக இந்தியச் சந்தையில் இத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றி ரிலையன்ஸ் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யலாம் என முடிவு செய்தது ஆரம்கோ.
இத்திட்டத்தின் படி தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளைக் கைப்பற்ற முடிவு செய்தது.
முதலீட்டாளர்கள்
இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஞாயிற்றுக்கிழமை எடுத்துள்ள முக்கியமான முடிவு சவுதி ஆரம்கோ விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் வர்த்தகத்தில் 15 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா உடனான 10 பில்லியன் டாலர் டீல் முறித்துக்கொண்டது சவுதி..!!