இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கீளின் எனர்ஜி துறையில் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது அனைவருக்கும் தெரியும். இந்தத் திட்டத்தை விரைவாகவும், மிகப்பெரியதாகவும் உருவாக்க வேண்டும் என இலக்குடன் முகேஷ் அம்பானி இயங்கி வருகிறார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய சோலார் பேனல் உற்பத்தி நிறுவனமான REC குரூப் தற்போது சீனாவின் சீனா நேஷ்னல் கெமிக்கல் கார்ப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
சீன கட்டுப்பாட்டில் இருக்கும் இந்நிறுவனத்தைத் தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளது.
ஐரோப்பாவின் REC குரூப்
REC குரூப்-ஐ கைப்பற்றுவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தனது கிளீன் எனர்ஜி திட்டத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலைக்கான அதிநவீன தொழில்நுட்பத்தை எளிதாகப் பெற முடியும். இதுமட்டும் அல்லாமல் சோலார் பேனல் உற்பத்திக்கும் வர்த்தகத்திற்கும் வெளிநாட்டில் தொழிற்சாலை கொண்டு இயங்க முடியும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த வர்த்தகத்திற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த பணத்தையும் தனது கையில் இருந்து முதலீடு செய்யாமல் 500 முதல் 600 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கடனாகப் பெற முடிவு செய்துள்ளது. மீதமுள்ள தொகைக்கு ரிலையன்ஸ் பங்குகளை அளிக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்தப் பங்கு பரிவர்த்தனை மூலம் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முடியும்.
சீனா அரசு நிறுவனம் - கெம்சீனா
சிங்கப்பூரில் பதவி செய்யப்பட்டு, நார்வே நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் REC குரூப் நிறுவனம், சீனா அரசு நிறுவனமான கெம்சீனா-வின் மிக முக்கியமான உறுப்பினர். கெம்சீனா நிறுவனம் பெரெலி டையர்ஸ் மற்றும் Syngenta ஆகிய நிறுவனங்களில் மிக முக்கியமான முதலீட்டாளராக உள்ளது.
சிலிக்கான் மெட்டிரியல்
REC குரூப் நிறுவனம் PhotoVoltaic பொருட்கள் மற்றும் மல்டி கிரிஸ்டலைன் வேபர்ஸ் ஆகியவற்றின் தயாரிப்புக்கு பயன்படும் சிலிக்கான் மெட்டிரியல்-ஐ தயாரிக்கிறது. இந்தச் சோலார் பேனல்கள் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் சோலார் பார்க் வரையில் அனைத்து இடத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று.
சீனா ஆதிக்கம்
சோலார் பேனல் மற்றும் சோலார் மின்சாரம் சார்ந்த துறை உலகளவில் சீனா-வை நம்பி தான் இயங்கி வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகச் சோலார் பேனல்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமளித்தும், சலுகைகளை வழங்கியும் வருகிறது.
புதிய மின்சார உற்பத்தி
2019ல் உலகளவில் புதிய மின்சார உற்பத்தியில் சோலார் பவர் முதன்மையாக விளங்குகிறது. இந்நிலையில் சோலார் பேனல் உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் Polysilicon கெமிக்கல் மொத்த உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு சீனாவின் XinJiang பகுதியில் இருந்து மட்டும் வருகிறது. அந்த அளவிற்குச் சீனா இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதானி, ரிலையன்ஸ், டாடா
தற்போது இந்தியாவில் அதானி, ரிலையன்ஸ், டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் சோலார் பேனல் உற்பத்தி மற்றும் சோலார் மின்சாரத் துறையில் மிகப்பெரிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதுநாள் வரையில் இந்தியாவிற்குத் தேவைப்படும் சோலார் பேனல்களில் 90 சதவீதம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
1.5 ஜிகாவாட் மின்சாரம்
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற திட்டமிடும் REC குரூப் வருடத்திற்கு 1.5 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கிறது. சுமார் 4 கோடி சோலார் பேனல்களைத் தயாரித்துள்ள REC குரூப் உலகளவில் ஐகியா, ஆடி, டைகர் பீர், பல நாட்டு மக்கள் என அனைத்து பிரிவிலும் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. 1996முதல் இயங்கி வருகிறது REC குரூப்.
REC குரூப் இந்தியா
REC குரூப் இந்தியாவிலும் கடந்த 10 வருடங்களாக இயங்கி வருகிறது, கார்ப்ரேட் முதல் ரீடைல் பிரிவில் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்திய சோலார் பேனல் வர்த்தகத்தில் REC குரூப் சுமார் 10 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
REC சிலிக்கான் மற்றும் REC சோலார்
2013ல் REC குரூப் REC சிலிக்கான் மற்றும் REC சோலார் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் REC சோலார் நிறுவனத்தைத் தான் சீனாவின் நேஷ்னல் ப்ளூஸ்டார் 640 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.