டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் தாறுமாறாக அதிகரித்து வரும் அதே நேரம், மறுபுறம் பொருளாதார ரீதியாக இன்னும் எவ்வளவு பின்னடைவை சந்திக்க போகிறோமோ? என்ற கேள்வி தான் எழுகிறது.
அதிலும் இந்தியாவின் டாப் பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியை கூட இந்த கொரோனா விடவில்லை என்பது தான் உண்மை.
ஏனெனில் யாரும் எதிர்பாராத வகையில் ஒர் அறிவிப்பினை கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டார். அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு தான்.
லாபத்தில் வீழ்ச்சி
இவரே சம்பளத்தினை குறைத்து விட்டாரா? என்ன காரணம் என்ற கேள்வி தான் அனைவரின் மனதிலும். கச்சா எண்ணெய் பிரிவில் பெருத்த அடி வாங்கி வரும் நிலையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் இதனை அறிவித்த சில மணிகளில் இந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையினை வெளியிட்டது இந்த நிறுவனம். பொதுவாக தான் எப்போதும் எந்த தொழிலும் கல்லா கட்டும் முகேஷ் அம்பானி தற்போது கிட்டதட்ட 39% லாபத்தில் வீழ்ச்சி கண்டுள்ளார்.
இவ்வளவு லாபம் குறைவா?
இது குறித்து வெளியான அறிவிப்பில், கடந்த மார்ச் மாதத்துடன் முடைவடைந்த இறுதி காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 38.73% குறைந்து 6,348 கோடி ரூபாயாக கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் இந்த நிறுவனத்தின் லாபம் 10,500 கோடி கிடைக்கும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாயும் வீழ்ச்சி
எனினும் கடந்த நிதியாண்டில் அதன் நிகரலாபம் 0.59% சரிந்து 39,354 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 39,588 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிபிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் ஒருகிணைந்த வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2.50% குறைந்து 1.51 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிப்பு
இதற்கு முக்கிய காரணம் கொரோனாவால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளது. போக்குவரத்து பாதிப்பால் விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் உற்பத்தி பாதிப்பு, சேவை துறைகளிலும் வணிகங்கள் பாதித்துள்ளதாகவும், தேவை குறைவாக உள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
சவாலான நேரத்திலும் நல்ல செயல்திறன்
இது குறித்து தனது கருத்தினை வெளிபடுத்தியுள்ள முகேஷ் அம்பானி, உலகளாவிய தொற்று நோயினால் கடுமையான சவால்கள் இருந்த போதிலும் கூட, எங்கள் நிறுவனம் நல்ல செயல்திறனை வழங்கியுள்ளது. எங்களது ஆயில் டூ கெமிக்கல்ஸ் வணிகங்கள் தொடர்ச்சியான வருவாயை வழங்கியுள்ளன.
செலவுகள் அதிகரிப்பு
எனினும் மார்ச் காலாண்டில் மொத்த சுத்திகரிப்பு விளிம்புகள் ஒரு பேரலுக்கு 8.90 டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் பேரலுக்கு 8.20 டாலர்களாக இருந்தது. இதே டிசம்பர் காலாண்டில் இந்த விகிதம் 9.2 டாலராக இருந்தது. எனினும் இந்த நிறுவனம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்குக்கு 6.50 டிவிடெண்ட் வழங்க இந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
உரிமை பங்கு வெளியீடு
இந்த நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 53,125 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2020, மார்ச் 31 நிலவரப் படி நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 3.36 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
ஜியோ வேற லெவல்
இது ஒரு புறம் இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 177.50% லாபத்தினை அதிகரித்து, 2,331 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வாடிக்கையாளர்கள் விகிதம் 26.30% அதிகரித்துள்ளதாகவும், ஒரு வாடிக்கையாளருக்கு 130.60 ரூபாய் அர்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.