இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் ரிலையன்ஸ் குழுமம். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 5 ஆண்டு கால முதிர்வு கொண்ட கடன் பத்திரங்கள் வெளியிட்டு அதன் மூலம் 12,500 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படை வெளியீட்டு அளவு 10,000 கோடி ரூபாயாகும். மேலும், கூடுதலாக 2,500 கோடி ரூபாய் வரை திரட்டுவதற்கான Greenshoe option இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த 5 ஆண்டு கால பத்திரங்களுக்கு அம்பானி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 7.47% வட்டி வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திர வெளியீட்டுக்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாகும். அந்த சமயத்தில் பொதுமக்கள் கூட இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதாவது கார்ப்பரேட் கடன் பத்திரங்களை பொறுத்தவரை ஒரு நிறுவனம் அதன் விரிவாக்கத்திற்கும் முதலீட்டுக்கும் பத்திரங்களை வெளியிடும். இது நாம் நிறுவனத்திற்கு கடன் கொடுப்பது போல, குறிப்பிட்ட முதிர்வு காலத்திற்கு பின் நம் முதலீடு கைக்கு வந்துவிடும், இடைப்பட்ட காலத்தில் வட்டியும் கிடைக்கும்.
பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் வரும். அந்த வகையில் ரிலையன்ஸின் இந்த அறிவிப்பு பத்திரங்களீல் முதலீடு செய்பவர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும். கடந்த 2023 நவம்பருக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் வெளியிடும் முதல் கடன் பத்திர வெளியீடு இதுவாகும். அப்போது நிறுவனம் 20,000 கோடி ரூபாய் திரட்டியது. அதுவே இந்தியாவின் நிதி அல்லாத கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய உள்ளூர் நிதி திரட்டலாக இருந்தது.
ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து ஐந்தாண்டு கால அரசுப் பத்திரங்களின் ஈவுத்தொகை சுமார் 33 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்துள்ளது. அதேசமயம், அமெரிக்க டாலர் பத்திரங்களின் வட்டி விலை உயர்ந்திருப்பதால், வெளிநாட்டு டாலர் கடன்களை விட உள்நாட்டில் கடன் பெறுவது ரிலையன்ஸுக்கு லாபகரமானதாக மாறியுள்ளது.
முன்னணி தனியார் துறை வங்கிகள் இந்த பத்திர வெளியீட்டிற்கான ஏற்பாட்டாளர்களாக செயல்படுகின்றன. மேலும், இந்த வங்கிகளே இந்த பத்திரங்களின் ஒரு பகுதியையும் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, ரிலையன்ஸ் நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் 10 ஆண்டு கால பத்திர வெளியீடு குறித்தும் வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசித்து வருகிறது. எனினும் அதன் விவரங்கள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. ரிலையன்ஸ் நிறுவன தொழில் மேம்பாட்டிற்காக முகேஷ் அம்பானி எடுத்துள்ள இந்த முயற்சி முதலீட்டாளர்களுக்கும் நிலையான வட்டி வருமானம் எதிர்பார்க்கும் நபர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


