கொரோனாவாவது ஒன்னாவது அது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் தன் பாட்டுக்கு தனது வேலையினை சிறப்பாக திட்டமிட்ட படி செய்து வருகிறார் முகேஷ் அம்பானி.
எப்படியேனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன்களை கட்டி கடன் இல்லா நிறுவனமாக மாற்றியே தீருவேன் என அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தனது வர்த்தகத்தின மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் சமீப காலமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரிய அளவிலான முதலீடுகளை திரட்டி வருகிறது.
உரிமை பங்கு வெளியீடு தொடக்கம்
இது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு துறை வரை, தனித்துவ இடத்தினை பிடித்துள்ள இந்த நிறுவனம் இன்று (மே 20) முதல் உரிமை பங்கு வெளியீட்டினை தொடங்கி உள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் மே 15ல் நடைபெற்றது.
இன்று முதல் எப்போது வரை?
இதில் இந்த நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீட்டை மே 20ம் தேதியிலிருந்து ஜூன் 3 வரையில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் படி இன்று தொடங்கியுள்ள இந்த உரிமை பங்கு வெளியீடானது ஜூன் 3 வுடன் முடிவடையுள்ளது. இந்த உரிமை பங்கு வெளியீடு மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 53,125 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் 39,755.08 கோடி ரூபாயினை கடனை திரும்ப செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
என்ன சலுகை?
மேலும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு 1:15 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த உரிமைப் பங்குகள் வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. அதோடு ஏப்ரல் 30ல் நிறைவடைந்த விலையில் 14 சதவீத தள்ளுபடியுடன் 1,257 ரூபாய் என்ற விலையில், ஒவ்வொரு 15 பங்குகளுக்கும், ஒரு உரிமைப் பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
எத்தனை பங்குகள் வெளியீடு?
மேலும் இந்த நிறுவனம் தலா 10 ரூபாய் முகமதிப்பில் 42,26,894 ஈக்விட்டி பங்குகளை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த உரிமைப் பங்கு வெளியீட்டை வாங்க இருப்பவர்கள், 25 % பணத்தை (314.25 ரூபாய்) முதலில் செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு தவணைகளை பொறுமையாகச் செலுத்தலாம். மே 2021-ல் இன்னொரு 25 சதவிகித (314.25 ரூபாய்) பணத்தை செலுத்தச் சொல்வார்கள். அதன் பின் நவம்பர் 2021-ல் மீதி 50 % பணத்தை (628.5 ரூபாய்) செலுத்தச் சொல்வார்களாம்.
9 முதலீட்டு வங்கிகள் நியமனம்
இந்த உரிமை பங்குகளை வாங்குபவர்கள், தங்களின் உரிமையை, பங்குச் சந்தைகளில், 29 மே 2020 வரை வர்த்தகம் செய்யலாம். இந்த உரிமை பங்கு வெளியீட்டுக்கு மொத்தம் 9 முதலீட்டு வங்கிகளை நியமித்து இருக்கிறார்களாம். அதில் சிட்டி பேங்க், மார்கன் ஸ்டான்லி, கோட்டக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் போன்றவைகளும் அடக்கமாம்.
மூதலீடு திரட்டல்
இந்த உரிமை பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக இந்த நிறுவனம் அதன் பங்கு விற்பனை மூலம் 67,194.75 கோடி ரூபாய் நிதி திரட்டியது. ரிலையன்ஸ் ஜியோவில் 14% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம், சில்வர் லேக் பாட்னர்ஸ், விஸ்டா நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் முதலீடு செய்துள்ளன.
யார் எவ்வளவு முதலீடு?
இதில் ஃபேஸ்புக் நிறுவனம் 9.99% பங்குகளை 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதே ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34% பங்குகளுக்கு 6,598.38 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே சில்வர் லேக் நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்திற்கு சுமார் 5,656 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது. இதன் மூலம் 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.