டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழில் துறையானது சற்று முடங்கியுள்ளது. சில நிறுவனங்கள் தங்களது பெரும் நஷ்டத்தினை கண்டு வருகின்றன.
மறுபுறம் முகேஷ் அம்பானியின் காட்டிலோ பண மழையாக கொட்டிக் கொண்டு இருக்கிறது எனலாம். ஏனெனில் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்தடுத்த முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனால் இந்தியாவில் ஏற்கனவே தனக்கென கணிசமான வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஜியோ நிறுவனம், மேற்கொண்டு உலகம் முழுக்க விரிவடைவதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளது.
முதலீடுகள் திரட்டல்
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் சத்தமேயில்லாமல் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்த முதலீடுகளை திரட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனம் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு 1.34% பங்கினை, அதாவது 6,598.38 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு
இந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடாகும். முகேஷ் அம்பானியின் ஜியோவில் கடந்த ஒரு மாதகாலமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைதளங்களின் ஜாம்பவான் ஆன ஃபேஸ்புக் நிறுவனம், சில்வர் லேக் பாட்னர்ஸ், விஸ்டா நிதி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஒரு மாத காலத்துக்குள் முதலீடு செய்துள்ளன.
டிஜிட்டல் மயமாக்கம்
இதனால் ஏற்கனவே இந்தியாவில் கணிகமான பங்கினை வகிக்கும் ஜியோ நிறுவனம், தொலைத் தொடர்பு துறையில் முதலிடம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் உலகத்தை சிறந்த முறையில் மேல்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான முதலீடுகள்
இந்தியா முதலீட்டு சந்தைகளின் கவர்ச்சிகரமான ஒரு நாடாக கருதப்படுவதாலும், அதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதாலும், ஜியோ தொடர்ச்சியாக சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது. எப்படியோங்க இதுவரையில் ஜியோ நிறுவனம் மொத்தம் 67,194.75 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.