நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட கொரோனாவால் பலத்த அடி வாங்கியுள்ளன எனலாம், ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காட்டில் முதலீட்டு மழையாக பெய்து கொண்டு இருக்கிறது.
இப்படி அதிரடி காட்டி வரும் முகேஷ் அம்பானிக்கு இது பொன்னான காலமே.
இதற்கிடையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை
இந்த கூட்டத்தில் என்ன ஒரு அறிவிப்பினை கொடுக்க போகிறாரோ தெரியவில்லையே என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம், மறுபுறம், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதிரடியான ஏற்றத்தினை கண்டு வருகிறது. தற்போது ஆர்ஐஎல் (RIL) பங்கின் விலையானது பிஎஸ்இ-யில் 2.19% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 42 ரூபாய் அதிகரித்து, 1958 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
புதிய உச்சம் தொட்ட பங்கு விலை
ரிலையன்ஸ் பங்கின் விலையானது இன்று புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக 1978.80 ரூபாய் வரை சென்று தற்போது 1958 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் வர்த்தக தொடக்கத்தில் 1937.95 ரூபாயாக தொடங்கிய இந்த பங்கின் விலையானது, குறைந்தபட்சம் 1935 வரை சென்று, ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதே செவ்வாய்கிழமையன்று முடிவு விலையானது 1917 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை அதிகரிக்கும்
பொதுவாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting) நடக்கும் போது ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் சரி, நிபுணர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. இதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தும் விதமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 ஆண்டு பொதுக்குழு கூட்டம், இன்று மதியம் 2 மணிக்கு நடக்கவுள்ள நிலையில், இதன் பங்கு விலையானது அதிரடியான ஏற்றத்தினை கண்டு வருகிறது. அது எந்த அளவுக்கு எனில், அதன் 52 வார உச்ச விலையினை தொட்டுள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான். ஜாக்பாட் தான்..