இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தக் கொரோனா காலத்திலும் பல்வேறு புதிய திட்டங்கள், முதலீடு ஈர்த்ததன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் ராக்ஸ்டாராக விளங்கியது.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வருடாந்திர கூட்டத்தை முதல் முறையில் விர்ச்சுவல் முறையில் இன்று நடத்தியது சாதித்தது மட்டும் அல்லாமல் கூகிள் நிறுவனத்தின் 33,737 கோடி ரூபாய் முதலீடு திட்டம், புதிய டெக்னாலஜி பொருட்கள் அறிமுகம், ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம் எனப் பல முக்கியத் திட்டங்களை அறிவித்தார் முகேஷ் அம்பானி.
சாமானியர்களை ஈர்க்கும் பல்வேறு அறிவிப்புகள் 43வது வருடாந்திர கூட்டத்தில் இருந்தாலும், இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். என்ன காரணம்..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இன்று காலை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர கூட்டத்தின் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரையில் அதிகரித்த நிலையில், ஒரு பங்கு விலை 1,978 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஆனால் வர்த்தக முடிவில் நேற்றைய வர்த்தக விலையை விடவும் 4 சதவீதமும், ஒரு நாள் வர்த்தகத்தில் (intraday trading) மொத்தம் 6.15 சதவீத சரிவையும் எதிர்கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், வர்த்தக முடிவில் ஒரு பங்கின் விலை 1842.35 ரூபாய் விலைக்குச் சரிந்தது.
1.26 லட்சம் கோடி ரூபாய்
இந்தச் சரிவின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.26 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்து மொத்த மதிப்பு 11.7 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
ஓரேநாளில் 6.15 சதவீத சரிவு, 1.26 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. என்ன காரணம்..?
முதலீட்டாளர்கள் மனநிலை
தமிழ் குட்ரிட்டன்ஸ் வெளியிட்டு இருந்ததைப் போல் கூகிள் முதலீடு குறித்தும் இதனால் ஜியோ கிடைக்கும் போகும் லாபம், புதிய வர்த்தகம், 4ஜி ஸ்மார்ட்போன், 5ஜி சேவை விரிவாக்கம் என அனைத்தும் முதலீட்டாளர்கள் அறிந்த நிலையில், இன்றைய 43வது வருடாந்திர கூட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சவுதி ஆராம்கோ வர்த்தகம் பற்றித் தான்.
சோகம்
சுமார் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு எவ்விதமான தீர்வும் காணப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கண்டிப்பாக இந்த முதலீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இதன் வெளிப்பாடு தான் இந்த 6 சதவீத சரிவு..!
ரிலையன்ஸ் - சவுதி அரம்கோ டீல்
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனமாக விளங்கும் அராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆஸ்தான வர்த்தகப் பிரிவான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளைக் கைப்பற்றி உற்பத்தி மற்றும் விநியோகத்தை உலகளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டது.
அராம்கோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த 20 சதவீத பங்குகளை 15 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற ஒரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்புதல் பெற்றது. ஆனால் இன்று வரையில் இத்திட்டம் அடுத்தகட்டத்திற்குச் செல்லவில்லை என்பது தான் சோகமான விஷயம்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகப் பிரிவைத் தனி நிறுவனமாகப் பிரிக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிகளவிலான புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பது முகேஷ் அம்பானியின் திட்டம்.
எண்ணெய் வர்த்தகம்
இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல், டெலிகாம் என இரண்டு புதிய துறையில் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வந்தாலும், இந்நிறுவனத்தின் உண்மையான மதிப்பு அனைத்தும் கச்சா எண்ணெய் முதல் கெமிக்கல் வர்த்தகத்தின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.
இத்துறை வர்த்தகம் வளர்ச்சி அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லவில்லை எனில் ரிலையன்ஸ்-ன் அடிப்படை வலிமையை இழக்க வாய்ப்பு உள்ளது. இதன் எதிரொலியாகத் தான் சவுதி அராம்கோ ஒப்பந்தத்தின் தாமதம் கூட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளை இன்று ஒருநாள் வர்த்தகத்தில் சுமார் 6 சதவீத சரிவிற்குத் தள்ளியுள்ளது.