ஒவ்வொரு மாதமும், இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு எவ்வளவு புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்து இருக்கிறார்கள், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு போன்ற கணக்கு வழக்குகளை , அரசின் டிராய் (TRAI) அமைப்பே வெளியிடும்.
இந்த கணக்கு விவரங்களில், எப்போதும் தட்டித் தூக்கும் ஜியோ நிறுவனமே, கடந்த டிசம்பர் 2019-ல் ஜர்க் அடித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த அக்டோபர் 2019-ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமாராக 9.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தார்கள். அதே போல கடந்த நவம்பர் 2019-ல் சுமாராக 5.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தார்கள். ஆனால் கடந்த டிசம்பர் 2019-ல் வெறும் 82,308 வாடிக்கையாளர்கள் மட்டுமே இணைந்து இருக்கிறார்களாம்.
ஆக தற்போது மொத்தம் 370 மில்லியன் வாடிக்கையாளர்கள், இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோவின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
டிசம்பரில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு, இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.
1. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்தே ஐ யூ சி கட்டணத்தை வசூலிப்பது.
2. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தன் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்தது.
ஒரு பக்கம் ரிலையன்ஸ் ஜியோவுக்கே வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டது என்றால் மறு பக்கம் வொடாபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் 3.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 11,000 பேர் வெளியேறி இருக்கிறார்களாம்.
டிராயின் தரவுகள் படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 327 மில்லியன் வாடிக்கையாளர்களும், வொடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு 332 மில்லியன் வாடிக்கையாளர்களும் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இதை சதவிகிதத்தில் பார்த்தால், ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் சேவையில் ஜியோ 32.14 சதவிகித சந்தையையும், ஏர்டெல் 28.43 சதவிகித சந்தையையும், வொடாபோன் ஐடியா 28.89 சதவிகித சந்தையையும் பிடித்து இருப்பதாகச் சொல்கிறது இந்திய அரசின் டிராய் அமைப்பு.
இதில் இன்னும் ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால், நம் டிராய் அமைப்பு திரட்டிய தகவல் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மொபைல் யூசர்களின் எண்ணிக்கை 3.2 மில்லியன் குறைந்து இருக்கிறதாம்.