கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது.
எங்கும் வர்த்தகங்களோ வியாபாரங்களோ இல்லை. ஆனால் ஒரு சில துறைகள் இந்த கொரோனா காலத்தில் தான் பயங்கரமாக கிளைவிட்டு பரப்பி இருக்கிறது.
அப்படிப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்று தான் டெலிகாம். இந்த லாக் டவுன் காலத்தில் இந்தியாவில் பல அலுவலகங்களும் ஆன்லைனில் தான் இப்போது வரை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
பொழுது போக்கு
அதோடு, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் டிஸ்னி, யூ டியூப் என மக்களும், ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்கிலேயே குடியிருக்கிறார்கள். இந்த லாக் டவுன் காலத்தில் எல்லாம் ஒரு நாளுக்கு 1.5 ஜிபி எல்லாம் போதவில்லை. குறைந்தபட்சம் 3 ஜிபியாவது இருந்தால் தான் பின் இரவு வரை சமாளிக்க முடியும் என்கிறார்கள்.
வியாபாரம்
இந்த நேரத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோ தன் வியாபாரத்தை பயங்கரமாக விஸ்தரித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ அசுரத் தனமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனாவையும் பயன்படுத்தி வளர்வது மற்ற கம்பெனிகளுக்கு நிச்சயம் ஒரு கிளியைக் கொடுத்து இருக்கும். சரி இதுவரை ரிலையன்ஸ் ஜியோ எவ்வளவு வளர்ந்து இருக்கிறது..?
ஜனவரி 2020
கடந்த ஜனவரி 2020-ல் ரிலையன் ஜியோ நிறுவனம் தான், இந்தியாவிலேயே அதிக செல்போன் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. அட இது பழைய செய்தி தானே என்கிறீர்களா..? அங்கு தான் ட்விஸ்டே. இனி கிட்டத்தட்ட எந்த நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவின் இடத்தைப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்கிறது டிராய் அறிக்கை.
எண்ணிக்கை
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 376.57 மில்லியனை (37.6 கோடி வாடிக்கையாளர்கள்) தொட்டு இருக்கிறது. இது இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 28 % என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த மொபைல் பயனர்களைக் கணக்கிட்டால் இது இன்னும் அதிகமாக இருக்கும்.
ஏர்டெல் & வொடாபோன் ஐடியா
இந்தியாவின் மற்ற பெரிய நிறுவனங்களான சுனில் மித்தலின் ஏர்டெல் 32.81 கோடி வாடிக்கையாளர்களையும், குமார மங்கலம் பிர்லாவின் வொடாபோன் ஐடியா 32.89 கோடி வாடிக்கையாளர்களையும் வைத்திருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த 2 கம்பெனியை விட சுமாராக 5 கோடி வாடிக்கையாளர்களை அதிகமாக வைத்திருக்கிறது ஜியோ.
ஜனவரியில் மட்டும்
ரிலையன்ஸ் ஜியோவில், கடந்த ஜனவரி 2020-ல் மட்டும் சுமாராக 65.5 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்து இருக்கிறது. ஏர்டெல் 8.5 லட்சம் பேரை மட்டுமே இழுத்து இருக்கிறது. ஆனால் வொடாபோன் ஐடியா 36.2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கிறது என கணக்கு சொல்கிறது டிராய்.
டிசம்பர் விலை ஏற்றம்
கடந்த அக்டோபர் 2019-ல் டெலிகாம் கம்பெனிகள் சுமாராக 96,000 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதன் பின், டிசம்பர் 2019-ல் இந்தியாவின் டெலிகாம் கம்பெனிகள், தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை சுமாராக 14 - 33 % வரை அதிகரித்தார்கள். இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத விலை ஏற்றம்.
விளைவு
அதன் விளைவாக, ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா போன்ற டெலிகாம் கம்பெனிகளின் வாடிக்கையாளர்கள், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கம்பெனிக்கு மாறத் தொடங்கினார்கள். எனவே இன்று இந்தியாவின் அசைக்க முடியாத டெலிகாம் கம்பெனியாக 37.65 கோடி வாடிக்கையாளருடன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கம்பீரமாக நடமாடுகிறது ஜியோ.