இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு நிதிச் சுமை உள்ளதோ அதே அளவிற்குக் கடுமையான போட்டியும் உள்ளது. இந்தப் போட்டிக்கு மத்தியில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது என்பது சாதாரணமான காரியமில்லை.
இந்தச் சூழ்நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையைச் செலுத்துவதற்காக அதிக வருமானத்தை ஈட்ட வேண்டிய நிலையில் டெலிகாம் கட்டணத்தை அனைத்து நிறுவனங்களும் தாறுமாறாக அதிகரித்தது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
இந்தச் சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பிற டெலிகாம் சேவைக்கு மாற அதிக வாய்ப்பு உள்ளது, இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக வோடபோன் ஐடியா ஒரு தில்லாலங்கடி வேலையைச் செய்தது, அதை ரிலையன்ஸ் ஜியோ கண்டுபிடித்து டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய்-யிடம் புகார் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ குற்றச்சாட்டு
ரிலையன்ஸ் ஜியோ டிராய் அமைப்பிற்கு வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் SMS சேவையை 149 ரூபாய் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு 179 ரூபாய் திட்டம் முதல் அளித்து வருகிறது. இது வாடிக்கையாளர்களை MNP அதாவது மொபைல் நம்பர் போர்ட் செய்வதற்குத் தடையாக இருக்கும் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
MNP சேவை
செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி டெலிகாம் வாடிக்கையாளர்கள் MNP செய்வதற்காகக் கோரிக்கை வைத்துள்ளனர், இந்த நிலையில் வோடபோன் நிறுவனத்தின் செயல் சக போட்டி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்குத் தடையாக மாறியுள்ளது என ரிலையன்ஸ் ஜியோ குற்றம்சாட்டி வருகிறது.
வோடபோன் ஐடியா திட்டம்
வோடபோன் ஐடியா தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் SMS சேவையை மாற்றியதன் மூலம் இந்நிறுவனத்தின் டெலிகாம் வாடிக்கையாளர் யாரேனும் வேறு நெட்வொர்க்-கிற்கு மாற வேண்டும் என்றால் கட்டாயம் 179 ரூபாய் திட்டம் அதாவது அதிக விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே மாற முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்குச் சுமை
இதன் மூலம் 179 ரூபாய் திட்டத்திற்குக் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் mobile number portability செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இது பிற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என ரிலையன்ஸ் ஜியோ குற்றம்சாட்டியுள்ளது.
ஜியோ-வின் தீர்வு
இதற்குத் தீர்வாக டிராய் அமைப்பு mobile number portability-க்கான எஸ்எம்எஸ் சேவை இலவசம் என்றோ அல்லது MNP-க்காக அதிகத் தொகை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யத் தேவை இல்லை என்றோ அறிவிக்க வேண்டும் என முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கை வைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மீது கொடுத்த குற்றச்சாட்டை முழுமையாக ஆய்வு செய்து அதன் பின்பு முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.