ஜியோவின் வருகைக்கு பின்னர் தான் தொலைத் தொடர்பு துறையில் ஒரு மாபெரும் விலை புரட்சி ஏற்பட்டது எனலாம். அதுவும் ஜியோ வருகையின் ஆரம்பத்தில் இலவச கால்கள், இலவச நெட் என கொடுத்து அசத்தியது.
இதுவே ஜியோ நிறுவனம் பல லட்சம் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் கவர காரணமாக இருந்தது.
இதனால் ஜியோவின் வருகைக்கு பிறகு கட்டண விகிதங்கள் எல்லாம் தலைகீழாக மாறியது. இலவசம். கட்டணங்கள் குறைப்பு என பல வகையிலும் வாடிக்கையாளர்கள் பலன் அடைந்தனர்.
வாடிக்கையாளர்களை தக்க வைக்க சலுகை
இதனால் ஜியோவுக்கு ஈடாக தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, ஏர்டெல், வொடபோன் நிறுவனங்களும் லாபத்தினை மறந்து, ஆஃபர்களை வாரி வழங்கின. ஆனால் தற்போது இதனால் மாபெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றன. சில தனியார் நிறுவனங்கள் காணாமல் போனதும் உண்மையே.
யாருக்கு பிரச்சனை
இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வொடபோன் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை மீண்டும் உயர்த்த தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ஜியோ நிறுவனம் சத்தமேயின்றி தனது இரண்டு மலிவான திட்டங்களை திடீரென நிறுத்தியுள்ளது. நிறுத்தப்பட்ட அந்த திட்டங்கள் என்னென்ன? இதனால் யாருக்கு பிரச்சனை வாருங்கள் பார்க்கலாம்.
நிறுத்தப்பட்ட திட்டங்கள் எது?
தற்போது நிறுத்தப்பட்டதாக கூறப்படும் ஜியோ நிறுவனத்தின் இரண்டு மலிவான திட்டங்களுமே, ஜியோபோனுக்கான மிக மலிவான திட்டங்களாகும். இது 39 ரூபாய் மற்றும் 69 ரூபாய் திட்டங்களாகும். மேலும் இனி ஜியோ போனுக்காக ரீசார்ஜ் திட்டங்கள் 75 ரூபாய்க்கே ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ போன் நெக்ஸ்ட்
ஜியோவின் இந்த அறிவிப்பானது ஜியோவின் விலை மலிவான, ஜியோ போன் நெக்ஸ்ட் அறிமுகம் செய்யும் ஒரு நாளுக்கு முன்பு செய்யப்பட்டுள்ளது. ஜியோ நெக்ஸ்ட் போன் ஆனது செப்டம்பர் 10 அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது ஜியோ நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய போன் ஆகும்.
என்னென்ன திட்டம்
ஜியோபோனின் 39 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தினசரி 100 எம்பி டேட்டா கிடைத்து வந்தது. இதே 69 ரூபாய் திட்டத்தில் தினசரி 0.5ஜிபி டேட்டா கிடைத்து வந்தது. இது தவிர எந்த திட்டத்திற்கும் இலவச கால் சேவையும், இலவசமாக 100 எஸ்.எம்.எஸ் சேவையும் வழங்கியது. இதனுடன் ஜியோ ஆப்களுக்கான அணுகலும் கிடைத்து வந்தது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி 14 நாட்களாகும்.
ரூ.75 திட்டம் பற்றி
ரூ.75 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இதில் 200 எம்பி டேட்டா தினசரி கிடைக்கும். இது தவிர கூடுதலாக 0.1ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் 50 இலவச எஸ்.எம்.எஸ் சேவையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜியோ போன் நெக்ஸ்ட் அறிமுகம் செய்யப்படவிருக்கும் நிலையில், நாளை வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
ஜியோபோன் நெஸ்க்ட் அறிமுகம்
ஏற்கனவே மலிவு விலையில் 5ஜி இணைப்பை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்திருந்தது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படும் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த போனில் யூசர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ், 3 ஜிபி ரேம் மற்றும் ஹெச்.டி டிஸ்பிளே உள்ளிட்ட சில அம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.