இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாகத் தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்து டெலிகாம் துறையில் பெரும் புரட்சியைச் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வரும் அதேவேளையில் தீபாவளி பண்டிகைக்கு மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
இந்திய மக்களின் மிகப்பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது பொதுவாகவே நாட்டின் வர்த்தகம், பணப்புழக்கம் ஆகியவை சிறப்பாக இருக்கும், இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி மிக முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
2020ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்தார் முகேஷ் அம்பானி. இப்படி ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் முதலீடு செய்த பல நிறுவனங்களில் கூகுள் நிறுவனமும் ஒன்று.
ரிலையன்ஸ் ஜியோ - கூகுள்
இந்த முதலீட்டுக்குப் பின்பு ரிலையன்ஸ் ஜியோவும் கூகுள் நிறுவனம் இணைந்து இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்து அதிகளவிலான டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வாடிக்கையாளர்களைக் கைப்பற்றும் மாபெரும் திட்டத்தைத் தீட்டியது.
மலிவான விலையில் ஸ்மார்ட்போன்
இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள்-ஐ பயன்படுத்தி ஸ்மார்ட்போன்-ஐ மிகவும் மலிவான விலையில் உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது R&D பணிகளைத் தாண்டி தற்போது தயாரிக்கும் பணியைத் துவங்கியுள்ளது. இதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களில் இருந்து உதிரி பாகங்கள் வாங்கும் பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள் உடன் கூட்டணி
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விங்க்டெக் மொபைல்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், யூடிஎல் நியோலின்க்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
50 டாலர் விலை
ஜியோ - கூகிள் கூட்டணியில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் விலை 50 டாலருக்கும் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 50 டாலர் என்றால் இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பில் 3,653 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீ புக்கிங் சேவை
இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் துவங்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் இதற்கான ப்ரீ புக்கிங் சேவை துவங்கும் எனவும் சந்தையில் கருத்து நிலவுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்தால் சிறப்பான வர்த்தகத்தைப் பெற முடியும் எனக் கவுன்டர்பாயின்ட் ரீசர்ச் தெரிவித்துள்ளது.
திட்டத்தின் வடிவம்
ஜியோ - கூகிள் கூட்டணி திட்டத்தில் கூகிள் மென்பொருளை மேம்படுத்துவதும், சீனாவின் விங்க்டெக் மொபைல்ஸ் நிறுவனம் மொபைல் வடிவமைக்கவும், Dixon, Flextronics மற்றும் UTL ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டம்
மேலும் வருகிற ஜூன் 24ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் வரும் வேளையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பை உயர்த்தும் சில முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்படும்.