மீண்டும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் அதிகரித்து இருக்கிறது. லாக் டவுன் ஏப்ரல் 30, 2020 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.
எனவே டேட்டாவின் தேவையும் சரமாரியாக அதிகரித்து இருக்கிறது. அலுவலக வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என ஒவ்வொரு நபரும் மூழ்கிக் கொண்டு இருப்பதும் டேட்டா தேவையை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
இந்த நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் (Reliance JioFiber) ஒரு காம்போ திட்டத்தை களம் இறக்கி இருக்கிறது.
199 ரூபாய் திட்டம்
1 டிபி (1000 ஜிபி) டேட்டாவுக்கு வெறும் 199 ரூபாய் (ஜிஎஸ்டி சேர்த்தால் 234 ரூபாய்) அறிவித்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் டேட்டாவின் வேகம் 100 எம் பி பி எஸ் (Mbps) ஆக இருக்குமாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்கள் மட்டும் தான். இந்த 7 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் வழங்கப்படுமாம்.
7 நாட்களுக்குப் பின்
இந்த 199 ரூபாய் திட்டத்தை ஒரு தனி திட்டமாகவோ அல்லது add-on திட்டமாகவோ ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபரில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 7 நாட்களுக்குப் பின் கூட அன்லிமிடெட் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் இணையத்தின் வேகம் 1 எம் பியாக குறைந்துவிடுமாம்.
ரிலையன்ஸ் ஜியோ
ஒரு பக்கம் ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் இப்படி புதிய திட்டங்களை அறிவிக்க, மறு பக்கம் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளித் தெளித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி என்ன சலுகைகளை வாரி வழங்கிவிட்டார்கள் எனப் பார்த்தால், 2 மடங்கு டேட்டா சலுகைகளைக் கொடுத்து இருக்கிறார்கள்.
2 மடங்கு டேட்டா
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Rs 11, Rs 21, Rs 51, Rs 101 திட்டங்களுக்கு வழக்கமாக கொடுத்துக் கொண்டிருந்த டேட்டாவை விட 2 மடங்கு அதிகமாக டேட்டா கொடுக்கிறார்கள். அதோடு ஜியோ அல்லாத வாடிக்கையாளர்களுடன் பேச கூடுதல் நிமிடங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.
விலை மலிவு
ரிலையன்ஸ் ஜியோ எப்படி குறைந்த விலைக்கு டேட்டா கொடுக்கத் தொடங்கி, இன்று இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறதோ, அதே போல, இந்த லாக் டவுன் வாய்ப்பிலும், குறைந்த விலை ஜியோ ஜிகா ஃபைபர் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கி இருக்கிறது.