இந்தியாவின் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் விரைவில் இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் சேர உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் இதற்கு காரணமாக இருக்க போகிறது.
இந்த ஆண்டில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு ஐபிஓ ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஐபிஓ. இந்த நிறுவனம் தனது பிரம்மாண்டமான 4 பில்லியன் டாலர் அதாவது 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ பங்குகளை வெளியிடுவதற்கான ஆரம்பக்கட்ட வரைவு அறிக்கையை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக 'பைனான்சியல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ சந்தைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, வரும் வெள்ளிக்கிழமை அன்று நிறுவன வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உரையாற்ற இருக்கிறார். கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட உரையிலேயே அவர் ஜியோ ஐபிஓ குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் ஈரான் போர் போன்ற பல்வேறு காரணங்களால் ஐபிஓ வெளியீடு தடைபட்டு கொண்டே வந்தது. இந்த சூழலில் அம்பானி இந்த ஆண்டு பங்குதாரர்கள் முன்னிலையில் ஆற்றவிருக்கும் வருடாந்திர பொதுக்குழு கூட்ட உரைக்கு முன்பாகவே, ஜியோ நிறுவனம் வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்யக்கூடும் என அந்த செய்தி கூறுகிறது.
இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிக முக்கியமான மற்றும் பெரிய ஐபிஓ-க்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியின் வருடாந்திர ஏஜிஎம் பேச்சு எப்போதும் முதலீட்டாளர்களால் உற்று நோக்கப்படும் ஒன்றாகும். அதற்கு முன்பாக இந்த ஐபிஓ சார்ந்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுவது சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர்க் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது, இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பல லட்சம் கோடி டாலர்களை திரும்ப பெற்றது உள்ளிட்டவை காரணமாக இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவிலேயே இருந்த வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவும் ஈரானும் போர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கின்றன. அதே வேளையில் இந்தியா அமெரிக்கா இடையேயான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
எனவே இனிவரும் நாட்களில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருக்கும் என்பதால் சரியான தருணத்தில் ஜியோ ஐபிஓவை வெளியிட வேண்டும் என காத்திருந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்கு பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த ஐபிஓ வெளியிடப்படும் போது ஜியோ பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் எலான் ம்ஸ்க் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஐபிஓ வெளியிட்டது. இதற்கு பங்குச்சந்தையில் நல்ல வரவேற்பு இருந்ததால் அந்த நம்பிக்கையில் ஜியோவும் ஐபிஓவும் வெளியிட ஆயத்தமாகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

