மும்பை: பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இன்று முதல் கட்டண உயர்வை அமல்படுத்திய போதும், வழக்கம்போல் இதனால் பலன் பெறப்போவது ரிலையன்ஸ் ஜியோ தான் என்று கூறப்படுகிறது.
பலத்த அடியை வாங்கிய பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரு புறம் நஷ்டத்தை சரி கட்ட பல வழிகளில் முயன்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்த இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்ட உயர்வானது இன்று முதல் அமலுக்கும் வந்துள்ளது.
கட்டண உயர்வால் ஆதாயம் இருக்கலாம்
இந்த கட்டண உயர்வால் இந்த இரு தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே சற்று ஆதாயம் காணலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியாவுக்கு அதன் நஷ்டத்தில் பெருமளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த கட்டண அதிகரிப்பானது இதன் சந்தை பங்கினை இழக்க வழிவகுக்கும்,. ஆக அதையும் ஈடுகட்ட இந்த இரு நிறுவனங்களும் போராட வேண்டியிருக்கும். கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
வருவாய் அதிகரிக்கும்
இதற்கு முன்பு குறைவான கட்டண விகிதத்திலேயே நல்ல லாபம் கண்ட ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட், கட்டண உயர்வின் விளைவாக இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஜே.எம் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முறையே 2,400 கோடி ரூபாய் மற்றும் 2,100 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது. எனினும் ஜியோவின் வருவாய் 3,900 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை
இது கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இது சந்தாதாரர்களின் அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கருதப்படுகின்றன. ஜியோவிற்கான இந்த அதிக லாபங்கள் கணிப்புகள், வோடபோன் ஐடியாவை சுற்றியுள்ள கவலையை இன்னும் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் ஜியோவின் பெற்றோர் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதிகரிக்கும் சந்தை மூலதனம்
அதிலும் கடந்த திங்கட்கிழமையன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 22,650 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே பார்தி ஏர்டெல் மூலதனம் வெறும் 9,370 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே வோடபோன் ஐடியாவின் சந்தை மூலதனம் 2,730 கோடி ரூபாயும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நாளுக்கு நாள் தங்களது சந்தை மதிப்பினை நாள் இழந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போஸ்ட் பெய்டு பிரிவில் வருவாய்
ஜியோ அதிக லாபம் ஈட்டுவதற்கான காரணம் என்னவெனில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் போஸ்ட் பெய்டு கட்டணங்களை தொடாமல் விட்டு விட்டன. ஏனெனில் இந்த பிரிவில் உள்ள கட்டணங்கள் ஏற்கனவே ப்ரீபெய்டு கட்டணங்களை விட அதிகமாகத்தான் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கான வருவாயில் சுமார் 30 சதவிகிதம் போஸ்ட் பெய்டு பிரிவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. எனினும் ஜியோ இது போன்ற எந்த அதிகப்படியான போஸ்ட் பெய்டு கட்டணங்களையும் கொண்டிருக்கவில்லை. இதுவே ஜியோவின் வருவாய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.
300 மடங்கு சலுகை
ஜியோ தனது கட்டண விகிதத்தினை 40 சதவிகிதம் அதிகரித்தாலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு 300 சதவிகித சலுகையை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பங்கு சந்தைகளின் வேகத்தை இன்னும் அதிகரிக்கக் கூடும். இந்த நிலையில் ஜியோவின் வருவாய் கடந்த 2018ம் நிதியாண்டில் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே 2020ம் நிதியாண்டின் பாதிலேயே 34.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று ஜே.எம் பைனான்ஷியல் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜியோ எப்போதும் மலிவான திட்டங்களையே வழங்கும்
இந்த நிலையில் ஏர்டெல் தனது சந்தை பங்கினை 30 சதவிகிதமாக வைத்திருந்த போதிலும், வோடபோன் ஐடியா அதன் சந்தை பங்கு விகிதம் 38.2 சதவிகிதத்திலிருந்து 29.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜியோவின் திட்டங்கள் சிறந்த விலை மதிப்பு சமன்பாட்டை வழங்கியுள்ளன. ஜியோ எப்போது மலிவான திட்டங்களையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது கவனிக்கதக்கது.
ஜியோவுக்கு சாதகம்
இந்த நிலையில் ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், அதன் திறன்களை அதிகரிக்க முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமானதாகவும் தெரியவில்லை. மேலும் வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் இன்னும் பல விஷயங்களைப் பொறுத்தது என்றும் கூறப்படுகிறது. எப்படி எனினும் இந்த அங்காளி பங்காளி சண்டையும் கூட ஜியோவுக்கு தான் சாதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.